செய்திகள்

அரூர் அருகே மரத்தில் கார் மோதி 3 பேர் பலி - 2 பேர் படுகாயம்

Published On 2019-01-22 13:59 GMT   |   Update On 2019-01-22 13:59 GMT
அரூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் உள்ள புளியமரத்தில் மோதிய விபத்தில் 3 பேர் பலியாகி உள்ளனர்.
அரூர்:

தர்மபுரி மாவட்டம், அரூர் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் அகமது. இவரது மகன் சலீம்பாஷா (வயது25), இவரது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த ஏகநாதன், குலாப், இஸ்மாயில் மற்றும் பச்சினாம்பட்டி பகுதியை சேர்ந்த சுல்தான் ஆகியோர்கள் நேற்று மொரப்பூருக்கு காரில் சென்றனர். அந்த காரை சுல்தான் ஓட்டினார். பின்னர் நேற்று நள்ளிரவு அனைவரும் காரில் வீடு திரும்பினர்.

அப்போது மொரப்பூர்- அரூர் சாலை அக்ரஹாரம் புதிய நகர் என்ற இடத்தில் வந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த அடுத்தடுத்து 3 புளிய மரத்தின் மீது மோதியது.

இதில் காரில் இருந்த சலீம்பாஷா, ஏகநாதன், குலாப் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

படுகாயம் அடைந்த இஸ்மாயில், சுல்தான் ஆகிய 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவ குறித்து தகவல் அறிந்த அரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுலோஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விபத்தில் பலியான 3 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக அரூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News