செய்திகள்

குடும்ப தகராறில் இளம்பெண் குத்திக்கொலை- கணவர் வெறிச்செயல்

Published On 2019-01-19 09:08 GMT   |   Update On 2019-01-19 09:08 GMT
கோவை மேட்டுப்பாளையத்தில் குடும்ப தகராறில் இளம்பெண்ணை குத்திக்கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

மேட்டுப்பாளையம்:

கோவை மேட்டுப்பாளையம் கண்டியூர் ரோட்டை சேர்ந்தவர் கார்த்திக். சுமை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி பிரியா (வயது 25). இவர்களுக்கு 6 வயதில் பிரதீக் என்ற மகன் உள்ளார்.

இந்த நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த பிரியா கடந்த 9 மாதங்களுக்கு முன்பு கணவரிடம் கோபித்துக்கொண்டு அந்த பகுதியில் உள்ள தாய் வீட்டில் மகனுடன் வசித்து வந்தார். கார்த்திக் அன்னை இந்திரா நகரில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு கார்த்திக் தனது மகனை அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். பின்னர் கடந்த 16-ந் தேதி மகனை அழைத்துக்கொண்டு பிரியாவிடம் விடுவதற்காக வந்தார். அப்போது திடீரென சிறுவன் வாந்தி எடுத்தான். இதனால் மனவேதனை அடைந்த பிரியா எதற்காக அவன் வாந்தி எடுக்கிறான் என்று கார்த்திக்கிடம் கேட்டார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த கார்த்தி தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து பிரியாவின் வயிறு, நெஞ்சிசு பகுதியில் சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் உயிருக்கு போராடினார்.

இதனை பார்த்த பிரியாவின் தாய் ஜெயந்தி, தந்தை மணி ஆகியோர் சேர்ந்து அரிவாள் மனையால் கார்த்திக்கின் தலையில் வெட்டினர். இதில் கணவன்-மனைவி இருவரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் பிரியா மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை 12.15 மணியளவில் பிரியா பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் கார்த்திக் மீது கொலை வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர். தற்போது மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் கார்த்திக் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags:    

Similar News