மாதவரம்-கோயம்பேடு மெட்ரோ ரெயில் பணிகள் விரைவில் தொடக்கம்
உலகத்தரம் வாய்ந்த நகர்புறப் பொதுப்போக்கு வரத்து சேவையை சென்னை மாநகரில், சென்னை மெட்ரோ ரெயில் உருவாக்கி உள்ளது.
2019-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் முதற் கட்டத்திட்டத்தின் அனைத்து வழித்தடங்களிலும் சேவைகள் முழுமையாக இயக்கப்படும்.
சுமார் 3,770 கோடி ரூபாய் செலவில் வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரையிலான முதற்கட்ட விரிவாக்க திட்டச்சேவைகள். 2020-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் திட்டமிட்டபடி துவங்கப்படும்.
மூன்று வழித்தடங்களை உள்ளடக்கிய இரண்டாம் கட்ட சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தினை, 107,55 கிலோ மீட்டர் நீளத்திற்கு செயல்படுத்துவதற்கு மாநில அரசு ஏற்கனவே கொள்கை அளவிலான ஒப்புதல் வழங்கி உள்ளது.
ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமையானது 20,196 கோடி ரூபாய் நிதிஉதவியினை, 52 கிலோ மீட்டர் நீளத்திற்கான மாதவரம்- சோழிங்கநல்லூர் மற்றும் மாதவரம்- சென்னை புறநகர் பேருந்து நிலையம் வரையிலான முன்னுரிமை வழித்தடப்பகுதிகளுக்கு தற்போது ஒப்புதல் வழங்கி உள்ளது.
ஏறத்தாழ 4,770 கோடி ரூபாய்க்கான முதல் தவணைக்கான கடன் ஒப்பந்தம் 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21-ம் நாளன்று கையொப்பமிடப்பட்டுள்ள நிலையில், இத்திட்டத்திற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
ஒருங்கிணைக்கப்பட்ட பன்முகப் போக்குவரத்து அமைப்பை செயல்பாட்டிற்கு கொண்டு வரும்முயற்சியாக, சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்துக் குழுமச் சட்டம் மற்றும் அதற்கான சட்ட விதிகள், 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 16-ம் நாளன்று அறிவிக்கை செய்யப்படும்.