செய்திகள்

தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

Published On 2018-12-31 09:24 GMT   |   Update On 2018-12-31 09:24 GMT
தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி:

தருமபுரி செங்கொடிபுரம் பகுதியை சேர்ந்தவர் முனியப்பன். இவரது மனைவி ராணி. இவர்களது மகன் சிவா. இவர் வாய்பேச முடியாதவர்.

இன்று காலை நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு ராணி கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தார்.

அப்போது திடீரென மறைத்து வைத்திருந்த மண்எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றினர்.

பின்னர் ராணியை தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் கூறியதாவது:-

நான் தருமபுரி செங்கொடிபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். எனது கணவர் முனியப்பன் வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளார். இதனை நான் பலமுறை கண்டித்துள்ளேன். நமக்கு வாய் பேச முடியாத மகன் உள்ளார். அதனை கருத்தில் கொண்டு கள்ளத்தொடர்பை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினேன். ஆனால் இதுவரை அவர் கேட்கவில்லை.

இது குறித்து நான் மாவட்ட கலெக்டரிடம் 2 முறை மனு கொடுத்தேன். இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும் எனது கணவர் முனியப்பன் என்னிடம் இருந்த சொத்துக்களை எல்லாம் எழுதி வாங்கினார். பின்னர் தினமும் என்னை வீட்டில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தினார். இதனால் எனது கணவர் முனியப்பன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News