போதுமான மழை பெய்தும் சேமிக்க தவறி விட்டோம் - அன்புமணி ராமதாஸ்
ஈரோடு:
ஈரோடு மாவட்ட இறகுபந்து கழக தலைவர் செல்லையன் என்கிற ராஜாவுக்கு பாராட்டு விழா ஈரோடு வில்லரசம்பட்டியில் நடந்தது.
விழாவில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:-
தமிழக இறகு பந்து கழகத்தின் தலைவராக நான் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. டோனமெட் சாப்ட்வேர் என்ற புதிய சாப்ட்வேர் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. இதில் வெளிப்படை தன்மை இருப்பதால் தகுதியான வீரர் -வீராங்கனைகள் மட்டுமே வெளிமாநிலங்களுக்கு சென்று விளையாட முடியும்.
நான் அரசியல்வாதி அல்ல. அதுபற்றி கற்றுக்கொண்டு இருக்கிறேன். நமக்கு போதுமான மழை இருக்கிறது. ஆனால் அதை நாம் சேமிக்க தவறிவிட்டோம். காவிரியில் இந்த ஆண்டு 170 டி.எம்.சி. தண்ணீர் கடலில் வீணாக கலந்துள்ளது. காவிரி பிரச்சினை என்பது கடந்த 140 ஆண்டுகளாக இருந்து வருகிறது.
ஆந்திரா, கர்நாடகாவை விட தமிழகத்தில் தான் அதிக மழை இருக்கிறது. ஆனால் கடந்த சில காலங்களாக மழைநீரை தேக்கி வைக்க நாம் வசதிகள் ஏதும் செய்யவில்லை. அத்திக்கடவு -அவிநாசி திட்டம் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அப்போது அதன் திட்ட மதிப்பு ரூ.13 கோடி.
ஆனால் இன்று அதன் திட்ட மதிப்பு ரூ.3 ஆயிரத்து 200 கோடி. ரூ.10 ஆயிரம் கோடி செலவாகும் என்றாலும் அந்த திட்டத்தை நிறைவேற்றி தான் ஆகவேண்டும். நீர்மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான் என்னுடைய நோக்கமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.