செய்திகள்
பலியான சிறுமி வினிதா.

ஆலங்குளத்தில் டிராக்டர் மோதி 3 வயது சிறுமி பலி

Published On 2018-12-19 05:44 GMT   |   Update On 2018-12-19 05:44 GMT
ஆலங்குளத்தில் இன்று காலை டிராக்டர் மோதி 3 வயது சிறுமி பலியானதையடுத்து போலீசார் டிரைவர் ராஜ்குமாரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் மகராஜன். இவரது மகள் வினிதா (வயது 3). இவள் அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் படித்து வந்தாள். இன்று காலை சிறுமி வினிதா வழக்கம்போல் அங்கன்வாடிக்கு தனியாக நடந்து சென்றாள். ஆனால் அங்கன்வாடி பூட்டப்பட்டிருந்தது.

அப்போது அங்கு சிறுமியின் உறவினரான அதே பகுதியை சேர்ந்த செல்லப்பசாமி மகன் ராஜ்குமார் டிராக்டரில் நின்று கொண்டிருந்தார். பின்னர் அவர் டிராக்டரை இயக்கி நகர்த்த முயன்றார். ராஜ்குமாரை பார்த்த சிறுமி வினிதா, மாமா என்று அழைத்தவாறு அவரை நோக்கி சென்றது. இதை கவனிக்காத ராஜ்குமார் டிராக்டரை பின்நோக்கி நகர்த்தினார்.

இதில் டிராக்டர் சிறுமி மீது மோதியது. இதில் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே சிறுமி வினிதா பரிதாபமாக இறந்தாள். இது குறித்து தகவலறிந்த ஆலங்குளம் சப்-இன்பெக்டர் உமா மகேஷ்வரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பலியான குழந்தை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் டிரைவர் ராஜ்குமாரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அங்கன்வாடிக்கு சென்ற சிறுமி டிராக்டரில் சிக்கி பலியாகி கிடந்ததை பார்த்து அவரது தாய், பாட்டி மற்றும் குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

Tags:    

Similar News