செய்திகள்

பெருந்துறையில் தனியார் நிறுவனத்தில் தீ - உடல் கருகி ஊழியர் பலி

Published On 2018-12-15 07:11 GMT   |   Update On 2018-12-15 07:12 GMT
பெருந்துறையில் தனியார் நிறுவனத்தில் தீயில் ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெருந்துறை:

பெருந்துறை குன்னத்தூர் ரோட்டில் வெல்டிங் வேலைகள் செய்யும் தனியார் நிறுவனம் உள்ளது.

நேற்று இரவு இங்கு ஊழியர்கள் பணி செய்தனர். இரவு 10 மணிக்கு நிறுவனம் மூடப்பட்டது. ஊழியர்கள் வெளியேறினர்.

இந்த நிலையில் இரவு 10.30 மணி அளவில் அந்த நிறுவனத்தில் இருந்து புகை வெளியேறியது. இதனால் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர்.

அவர்கள் அந்த நிறுவனத்தில் சென்று பார்த்தனர். அப்போது அங்கு தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். வெகு நேரம் போராடி தீயை அணைத்தனர். அந்த நிறுவனத்தின் அலுவலக அறையிலும் தீப்பற்றி எரிந்தது.

அந்த அறை உள் பக்கமாக பூட்டி கிடந்தது. அறையின் கதவை உடைத்து உள்ளே சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

அப்போது அங்கு ஒருவர் தீயில் கருகி பிணமாக கிடந்தார். அவர் அந்த நிறுவனத்தில் அச்சு தயாரிப்பாளராக பணிபுரிந்த ஆறுமுகம் (வயது 45) என்பது தெரியவந்தது.

அவர் திண்டுக்கல்லை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இவர் அவ்வப்போது தான் இங்கு வந்து அச்சு தயாரிப்பில் ஈடுபடுவார். நேற்று இங்கு வந்த அவர் எப்போது அலுவலக அறைக்குள் சென்றார்? என்பது தெரியவில்லை.

நிறுவனத்தை மற்ற ஊழியர்கள் பூட்டி சென்ற பின்னர் ஆறுமுகம் உள்ளே சென்றது எப்படி? என்பதும் தீ விபத்து ஏற்பட்டது எப்படி? என்பதும் மர்மமாக உள்ளது.

தகவல் கிடைத்ததும் பெருந்துறை போலீஸ் டி.எஸ்.பி. ராஜாகுமார், இன்ஸ்பெக்டர் சுகவனம், சப்-இன்ஸ்பெக்டர்கள் எட்வர்ட்ராஜ், ராம்பிரபு ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.

அவர்கள் விபத்து குறித்து விசாரணை நடத்தினார்கள். அந்த நிறுவனத்தில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டு உள்ளது. அதன் மூலம் அங்கு நடந்தது என்ன? என்பது குறித்து விசாரணை துரிதப்படுத்துப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News