செய்திகள்

பொன்னேரி அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி

Published On 2018-12-11 06:58 GMT   |   Update On 2018-12-11 06:58 GMT
பொன்னேரி அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி:

மீஞ்சூரை அடுத்த கேசவபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரேமா (56). இவர் பொன்னேரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு திரும்பி வந்தார்.

கேசவபுரத்தில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு பொன்னேரி-மீஞ்சூர் சாலையை கடக்க முயன்றார். அப்போது மின்னல் வேகத்தில் வாலிபர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பிரேமா மீது பயங்கரமாக மோதியது.

இதில் சில அடி உயரம் தூக்கி வீசப்பட்ட அவர் அருகில் இருந்த சாலை தடுப்பு சுவரில் மோதி சிறிது தூரம் தள்ளி விழுந்தார். இதே போல் அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிளும் தரையில் தீப்பொறி பறக்க உரசியபடி சுமார் 20 அடி தூரத்துக்கு இழுத்து செல்லப்பட்டு விழுந்தது.

இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த பிரேமா சம்பவ இடத்திலேயே பலியானார். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபர் தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். அவருக்கு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நெஞ்சை பதறவைக்கும் இந்த விபத்து காட்சி அருகில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது. சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவி வருகிறது.

விபத்து குறித்து மீஞ்சூர் போலீசார் விசாரணை நடந்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News