செய்திகள்

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 2 பேர் விடுதலை

Published On 2018-12-03 08:27 GMT   |   Update On 2018-12-03 08:27 GMT
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 2 பேர் விடுதலை செய்யப்பட்டனர். #Rameswaramfishermen
ராமேசுவரம்:

கடந்த செப்டம்பர் 11-ந் தேதி ராமேசுவரம் தனுஷ்கோடியில் இருந்து வினோத், மகாராஜா ஆகிய 2 பேர் மிதவை மூலம் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர்.

கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பலத்த காற்று வீசியதில் மிதவை கவிழ்ந்தது.

இதனால் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 2 மீனவர்களையும், அந்த வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.

இருவரும் இலங்கை மல்லாகம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இது குறித்த வழக்கு இன்று மல்லாகம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தராஜ், 2 மீனவர்களுக்கும் மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து 2 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் மெரியானா முகாமுக்கு அழைத்துச் சென்றனர். ஓரிரு தினங்களில் அவர்கள் தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Rameswaramfishermen

Tags:    

Similar News