செய்திகள்

எனக்கு அரசியல் ஆசை இல்லை- நடிகை கஸ்தூரி

Published On 2018-11-26 11:11 GMT   |   Update On 2018-11-26 11:11 GMT
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னால் முயன்ற உதவியை செய்ததாகவும் தனக்கு அரசியல் ஆசை இல்லை எனவும் நடிகை கஸ்தூரி கூறியுள்ளார். #GajaCyclone #Kasturi
வடவள்ளி:

கோவை கலிக்கநாயக்கன் பாளையத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது-

டெல்டா மாவட்டத்தில் ஏற்பட்ட புயலினால் பாதிக்கபட்ட மக்களுக்கு கடந்த 2நாட்களாக நேரில் சென்று நிவாரணப் பெருட்களை கொடுத்து வந்தேன். முத்துப்பேட்டை, மன்னார்குடி , தில்லை வளாகம், உள்ளிட்ட பகுதிகளிலும் நாகப்பட்டினத்தில் சாலையோர முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கும் என்னால் முடிந்த பொருட்களை கொடுத்து உள்ளேன்.

மக்கள் அனைத்தையும் இழந்து தெருக்களில் தனித்தனியாக நிற்கின்றனர். இந்த நிலையிலும் நிவாரணப்பொருட்கள் பெறுவதிலும் வேறுபாடுகள் இருக்கிறது. இறுதியாகத்தான் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் சென்று அடைகிறது. சாலையில் சுலபமாக செல்லக்கூடிய இடங்களில் மட்டும் சென்று நிவாரண பொருட்களை கொடுக்கும் சமூக ஆர்வலர்கள் இன்னும் வாகன வசதி இல்லாத இடங்களுக்கும் சென்று பொருட்களை வழங்க வேண்டும்.

டெல்டாவில் நிறைய கிராமங்களுக்கு இதுவரையில் எந்த உதவியும் கிடைக்கவில்லை. கிராமங்கள் கேட்பாரற்று கிடக்கிறது.

இன்னும் ஒரு மாதத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு முடிவடைய உள்ளது. இதனால் மிகவும் குறைவான விலையில் குடிநீர் பாட்டில்கள் வாங்கி அங்கு ஒரு பெரிய கட்சி அலுவலகத்தில் அடுக்கி வைத்து உள்ளனர். இதனால் பொன் விலையும் பூமியான டெல்டா மாவட்டத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகரித்து விடும். இதை அப்புறப்படுத்த அரசு தனி திட்டம் வகுக்க வேண்டும். நிறைய ஆர்வலர்கள் முன் வந்து நிவாரண பொருட்கள் கொடுத்து வருகின்றனர். அங்கு உள்ள மக்களின் தேவையை அறிந்து பொருட்களை கொடுத்து உதவுங்கள். தற்போதைய தேவையான தார்பாய், மெழுகுவர்த்தி, போர்வைகள், பாய்கள், நல்ல கால்மிதிகள் இவைகளை மக்களிடம் கொடுங்கள் .



டப்பிங் சங்கத்தில் இருந்து சின்மயியை நீக்கியது தவறு. அப்படியானால் வைரமுத்து குற்றவாளியா? என தாங்களே வாக்குமூலம் தருகிறார்களா? சின்மயியை நீக்கியது முட்டாள் தனம். வைரமுத்து மீது நான் மதிப்பும் மரியாதையும் வைத்து உள்ளேன்.

நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்கிறேன் என்றதும் முதலில் எனக்கு பாராட்டும் உதவியும் செய்தவர் வைரமுத்து. ஆசை, அரசியல், குறிக்கோள் என்று எனக்கு எதுவும் இல்லை. இன்றைய அரசு அனைத்தையும் சரியாக செய்து விட்டால் நாம் அனைவரும் வீட்டில் அமைதியாக டி.வி. பார்த்து கொண்டு இருப்போம். அரசு சற்று மெதுவாக இயங்குவதினால் வேகமாக இருக்கும் சிலர் வெளியில் தெரிகிறார்கள். இந்த அரசுக்கு கட்டுப்பட்ட சாதாரன தமிழச்சியாகத்தான் நான் இன்றும் இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #Kasturi
Tags:    

Similar News