திருமங்கலத்தில் மத்திய அரசு அதிகாரி தற்கொலை
போரூர்:
திருமங்கலம் சி.பி.டபுள்யூ. குடியிருப்பு 46-வது பிளாக்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ஞானசேகர் (வயது52). தேனாம்பேட்டையில் உள்ள மத்திய அரசு கணக்கு தணிக்கை அலுவலகத்தில் அதிகாரியாக இருந்தார். இவரது மனைவி மார்க்ரெட். இவர்களுக்கு மகளும், மகனும் உள்ளனர்.
இன்று காலை வெகு நேரமாகியும் ஞானசேகரின் படுக்கையறை கதவு திறக்க வில்லை. சந்தேகமடைந்த குடும்பத்தினர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது அங்குள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு ஞானசேகர் தற்கொலை செய்து இருந்தார். இதனை பார்த்த குடும்பத்தினர் கதறி அழுதனர்.
இதுகுறித்து திருமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணா மற்றும் போலீசார் ஞானசேகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் ஞானசேகர் கடந்த சில மாதங்களாக கடன் பிரச்சினையால் மிகுந்த மன உளைச்சலில் இருந்தது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.