செய்திகள்
அனுசுயா

பட்டுக்கோட்டை அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மாணவி பலி

Published On 2018-11-24 09:46 GMT   |   Update On 2018-11-24 09:46 GMT
பட்டுக்கோட்டை அருகே நிவாரண பொருட்கள் வாங்க வந்த மாணவி வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பட்டுக்கோட்டை:

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் பாவாஜிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் கண்ணன்(வயது 42). இவருடைய மனைவி ராணி(40). இவர்களுடைய மகள் அனுசுயா(19). இவர் அருகே உள்ள கல்லூரியில் பி.ஏ. படித்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன் வீசிய கஜா புயலில் சிக்கி கண்ணனின் வீடு உள்பட அந்த பகுதியில் உள்ள ஏராளமான மக்களின் வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்தது.

ஆனால் இந்த பகுதிக்கு அரசு அதிகாரிகள் யாரும் வந்து இதுவரையில் நிவாரண பொருட்களை வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் இப்பகுதியை சேர்ந்த மக்களுக்கு பல தனியார் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் போர்வை, பாய், கொசுவர்த்தி மற்றும் உணவு பொருட்களை வேன்களில் கொண்டு வந்து வழங்கி வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று மதியம் தனியார்நிறுவனம் ஒன்றின் சார்பில் நிவாரண பொருட்களை ஏற்றிக்கொண்டு ஒரு வேன் பாவாஜிக்கோட்டைக்கு வந்தது. உடனே சேதம் அடைந்த தனது வீட்டில் இருந்து அனுசுயா நிவாரண பொருட்களை வாங்க வெளியே சென்றார். ரோட்டில் அவர் சென்று கொண்டிருந்தபோது அருகே உள்ள ஒரு வீட்டில் மழையில் நனைந்திருந்த சுவர் திடீரென இடிந்து நடந்து சென்று கொண்டு இருந்த அனுசுயா மீது விழுந்தது.

இதில் உடல் நசுங்கிய அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது உடலை பார்த்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இது குறித்து தகவல் அறிந்த மதுக்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அனுசுயாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News