செய்திகள்

வேளச்சேரியில் பெண் போலீஸ் வீட்டில் 40 பவுன் கொள்ளை

Published On 2018-11-13 06:31 GMT   |   Update On 2018-11-13 06:31 GMT
சென்னை வேளச்சேரியில் பெண் போலீஸ் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:

சென்னை வேளச்சேரி லட்சுமி நகர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி சத்யபிரியா சென்னை தெற்கு மண்டல காவல் இணை ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்.

சத்யபிரியா வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 40 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதுபற்றி வேளச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் ஷீலா பார்த்த சாரதி. இவர் திருவண்ணாமலை சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 10 கிலோ வெள்ளி, 3 லட்சம் மதிப்பிலான வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அம்பத்தூரில் ராஜா சந்திரசேகர் என்பவர் வீட்டு பூட்டை உடைத்து 5 சவரன் நகை, 2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

சென்னை போர் நினைவு சின்னம் அருகே உள்ள அன்னை சத்யாநகரில் வசித்து வருபவர் அலேகா. திருநங்கையான இவர் வெளியில் சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டில் இருந்த 40 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

இதுபற்றி கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Tags:    

Similar News