செய்திகள்

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பன்றிக் காய்ச்சலுக்கு 3 பெண்கள் பலி

Published On 2018-11-09 04:13 GMT   |   Update On 2018-11-09 04:56 GMT
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பன்றிக்காய்ச்சலுக்கு சிகிச்சை பலனின்றி 3 பெண்கள் பலியாகி உள்ளனர். #SwineFlu
மதுரை:

திண்டுக்கல் அருகேயுள்ள பரளிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் அழகு ராஜ். இவரது மனைவி ஜீவிதா (வயது 19). கடந்த வாரம் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஜீவிதா நத்தம் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் காய்ச்சல் குணமாகவில்லை.

எனவே மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ரத்த மாதிரியை பரிசோதனை செய்ததில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜீவிதா பரிதாபமாக இறந்தார்.

மதுரை மாவட்டம், திருவேடகம் அருகேயுள்ள கீழமாத்தூரைச் சேர்ந்த பெரியசாமி மனைவி லட்சுமி (34). பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர், மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தனி வார்டில் சிகிச்சை பெற்று வந்தார். டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த லட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

திருமங்கலம் பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி சுப்புலட்சுமி (61). பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்புலட்சுமி இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார்.

பன்றிக்காய்ச்சல் பாதிப்பு உள்ள 23 பேர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். #SwineFlu
Tags:    

Similar News