சபரிமலை தீர்ப்பை எதிர்த்து நத்தத்தில் அய்யப்ப பக்தர்கள் ஊர்வலம்
நத்தம்:
சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபாடு நடத்தலாம் என்று சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி தமிழகத்திலும், கேரளாவிலும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. பெண்களே தீர்ப்பை ஏற்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் இந்துமுன்னணி மற்றும் அய்யப்ப சேவா சங்கம் சார்பில் ஊர்வலம் நடைபெற்றது. தாலுகா அலுவலகம் முன்பு இருந்து தொடங்கிய ஊர்வலம் பஸ் நிலையம், மூன்றுலாந்தர், மாரியம்மன் கோவில், அவுட்டர் சாலை, கோவில்பட்டி வரை சென்றது.
அப்போது அய்யப்பன் பஜனை பாடல்களை பாடியவாறு பக்தர்கள் சென்றனர். ஊர்வலத்தில் ஏராளமான பெண்களும் பங்கேற்றனர். அவர்கள் தெரிவிக்கையில், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்வதை பெரும்பாலும் விரும்ப வில்லை.
கோர்ட்டு உத்தர விட்டாலும் ஆகமவிதிகளின்படி வழிபாடுகள் நடக்கும் சபரிமலைக்கு 10 முதல் 50 வயதுடைய பெண்கள் செல்வது ஏற்புடையதாகாது. எனவே பக்தர்களின் மன உணர்வுகளை புரிந்து இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என்றனர். #Sabarimala