செய்திகள்
மனைவி சுபியுடன் ராணுவ வீரர் ஜெகன்.

பஞ்சாப்பில் நக்சலைட்டுகள் துப்பாக்கிச்சூட்டில் குமரி. ராணுவ வீரர் பலி

Published On 2018-10-09 14:07 IST   |   Update On 2018-10-09 14:07:00 IST
பஞ்சாப்பில் நக்சலைட்டுகள் துப்பாக்கிச்சூட்டில் குமரி மாவட்ட ராணுவ வீரர் பலியான சம்பவம் அவரது குடும்பத்தினரை மட்டுமல்லாமல் அந்த கிராமத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. #NaxalOperation #TNSoldierDeath
தக்கலை:

தக்கலை அருகே உள்ள கோழிப்போர்விளையை அடுத்த பருத்திக்காட்டு விளையைச் சேர்ந்தவர் ஜெகன் (வயது 38). இவர் கடந்த 16 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி சுபி. கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதி இவர்களுக்கு திருமணம் நடந்தது. தற்போது சுபி 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். 15 நாட்களுக்கு முன்பு கர்ப்பமாக இருக்கும் மனைவியை பார்ப்பதற்காக ஜெகன் ஊருக்கு வந்திருந்தார். பின்னர் விடுமுறை முடிந்து பஞ்சாப் மாநிலத்துக்கு பணிக்கு சென்றார்.

நேற்று அங்கு நக்சலைட் தீவிரவாதிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் ஜெகனும் ஈடுபட்டு இருந்தார். நக்சலைட்டுகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் ஜெகன் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்த தகவல் தக்கலை பருத்திக்காட்டு விளையில் உள்ள உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ஜெகனின் மரணச் செய்தி கேட்டு அவரது கர்ப்பிணி மனைவி சுபி மற்றும் உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.



ஜெகனின் உடலை சொந்த ஊர் கொண்டு வருவதற்காக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை உறவினர்கள் தொடர்பு கொண்டனர். அவரது முயற்சியின் பேரில் ஜெகனின் உடலை ஊருக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. அனேகமாக நாளை ஜெகன் உடல் சொந்த ஊர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பலியான ராணுவ வீரர் ஜெகனின் தந்தை வேலப்பன். தாயார் சீதாலட்சுமி. இவருக்கு 2 சகோதரிகளும், ஒரு சகோதரனும் உள்ளனர். ஜெகன் சிறு வயதாக இருக்கும்போது வேலப்பன் இறந்து விட்டார். இதனால் ஜெகன் குடும்ப பாரத்தை சுமந்தார். 2 சகோதரிகளுக்கும் திருமணம் செய்து கொடுத்த பின்தான் தனக்கு திருமணம் என்ற குறிக்கோளுடன் வாழ்ந்தார்.

அதன்படி 2 சகோதரிகளுக்கும் திருமணம் நடந்த பின்னர் தனது 38 வயதில் தான் ஜெகன் திருமணம் செய்து கொண்டார். அவர் இறந்தது அவரது குடும்பத்தினரை மட்டுமல்லாமல் அந்த கிராமத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

ஜெகனின் மனைவி சுபியின் சொந்த ஊர் தெற்கு சூரங்குடி ஆகும். அந்த கிராமத்திலும் உறவினர்கள் சோகம் அடைந்துள்ளனர். #NaxalOperation #TNSoldierDeath



Tags:    

Similar News