செய்திகள்

லஞ்ச வழக்கில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளரின் 6-வது லாக்கரை திறந்து சோதனை

Published On 2018-09-26 10:15 GMT   |   Update On 2018-09-26 10:15 GMT
லஞ்ச வழக்கில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளரின் வங்கியின் 6-வது லாக்கரை லஞ்ச ஒழிப்பு போலீசார் திறந்து சோதனை செய்தனர். #RTO #DVACRaid

கடலூர்:

கடலூர் செம்மண்டலம் தவுலத் நகர் பகுதியை சேர்ந்த பாபு (வயது 55). விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.

கடந்த 11-ந் தேதி சுற்றுலா வேனுக்கு தகுதி சான்றிதழ் வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது விழுப்புரம் லஞ்சஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த புரோக்கர் செந்தில்குமார் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். கைதான 2 பேரும் சிலையில் அடைக்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து கடலூரில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவின் வீட்டில் லஞ்சஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில் ரூ.30 லட்சம், தங்கநகைகள் மற்றும் வெள்ளி நகைகளை கைப்பற்றினர்.

பாபுவின் வங்கி லாக்கர்களில் தங்க நகைகள் மற்றும் ஆவணங்கள் மறைத்து வைத்திருக்கலாம் என லஞ்ச ஒழிப்பு போலீசார் கருதினர். அதனைத் தொடர்ந்து கடந்த 19-ந் தேதி கடலூர் மஞ்சக்குப்பம் மற்றும் பாரதி சாலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பாபுவின் பெயரில் உள்ள 3 வங்கி லாக்கர்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் திறந்து சோதனையிட்டனர்.

அதில் 10 கிலோ தங்க நகைகள், 20 கிலோ வெள்ளி பொருட்கள்இருந்தன. பின்பு அவற்றை மதிப்பீடு செய்து மீண்டும் லாக்கர்களில் வைத்து பூட்டி சீல் வைத்தனர்.

இந்த நிலையில் விழுப்புரம் லஞ்சஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையில் போலீசார் 2-வது முறையாக கடலூர் செம்மண்டலத்தில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்றனர். பின்பு அங்கு பாபுவின் பெயரில் இருந்த 2 லாக்கர்களை திறந்து சோதனை செய்தார்கள். அதில் 500 கிராம் தங்க நகைகள் பலகோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் இருந்தன.

இதையடுத்து நகை மதிப்பீட்டாளரை வரவழைத்து நகைகள் மதிப்பிடப்பட்டன. பின்பு நகைகளும், சொத்து ஆவணங்களும் லாக்கரில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது.

கடலூர் மஞ்சக்குப்பம் விநாயகர் கோவில் அருகே உள்ள தனியார் வங்கியிலும் பாபுவின் பெயரில் லாக்கர் உள்ளது. அந்த லாக்கரிலும் கோடிக்கணக்கான நகைகள் மற்றும் சொத்து ஆவணங்கள் இருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.

இன்று காலை விழுப்புரம் லஞ்சஒழிப்பு போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையில் 4 போலீசார் கடலூர் வந்தனர். பின்பு அவர்கள் அந்த வங்கிக்கு சென்று பாபுவின் பெயரில் உள்ள 6-வது லாக்கரை திறந்து சோதனை செய்தனர். அதிலும் தங்க நகைகளும், ஏராளமான சொத்துக்களின் ஆவணங்களும் இருந்தன.

இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் 2 ஆயிரம் பவுன் தங்க நகைகள், வெள்ளி நகைகள் இருப்பது தெரியவந்தது. மேலும் பாபுவின் பெயரில் கோடிக் கணக்கான சொத்துக்கள் கடலூர், சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் இருப்பது தெரிய வந்துள்ளது. கடலூரில் 6 இடங்களில் வீடுகள் உள்ளன.

மேலும் அவர் பினாமி பெயரிலும் சொத்துக்கள் வாங்கி குவித்திருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. #RTO #DVACRaid

Tags:    

Similar News