செய்திகள்
பெரியார் சிலை அவமதிக்கப்பட்டுள்ள காட்சி.

தாராபுரத்தில் பெரியார் சிலை அவமதிப்பு- திராவிடர் கழகத்தினர் திரண்டதால் பரபரப்பு

Published On 2018-09-17 11:20 GMT   |   Update On 2018-09-17 11:20 GMT
தாராபுரத்தில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது. சிலை அவமதிப்பை தொடர்ந்து அங்கு தாராபுரம் டி.எஸ்.பி. வேலுமணி, இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். #PeriyarStatue
தாராபுரம்:

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தீவுத்திடலில் பெரியார் சிலை உள்ளது. இன்று பெரியார் பிறந்த நாள் என்பதால் நேற்று மாலை திராவிடர் கழகத்தினர் சிலையை சுத்தம் செய்து விட்டு சென்றனர்.

இந்த நிலையில் நள்ளிரவு அங்கு வந்த மர்ம நபர்கள் பெரியார் சிலையின் தலையில் இரு செருப்புகளை வைத்து விட்டு சென்று விட்டனர். இதனை இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து திராவிடர் கழகத்தினருக்கு தகவல் கொடுத்தனர்.

அங்கு திராவிடர் கழகத்தினர் திரண்டனர். சிலை அவமதிப்பு தொடர்பாக மாவட்ட செயலாளர் சண்முகம் மற்றும் நிர்வாகிகள் தாராபுரம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெரியார் சிலை மீது வைக்கப்பட்டு இருந்த செருப்பை அகற்றினார்கள்.

பெரியார் சிலையை அவமதித்தவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெரியார் சிலை வைக்கப்பட்டு உள்ள தீவுத்திடல் பகுதியில் தான் நீதிபதிகள் குடியிருப்பு மற்றும் தாசில்தார் வீடு அமைந்துள்ளது. முக்கிய பிரமுகர்கள் குடியிருப்பு பகுதியிலே சிலை அவமதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழகத்தில் உள்ள தலைவர்கள் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அப்போது தாராபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 2 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

தற்போது போலீஸ் பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்ட நிலையில் சிலை அவமதிக்கப்பட்டு உள்ளது.

இன்று பெரியார் பிறந்தநாள் என்பதால் தீவுத்திடலில் உள்ள பெரியார் சிலைக்கு தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் மாலை அணிவிக்க வந்தனர்.

சிலை அவமதிப்பை தொடர்ந்து அங்கு தாராபுரம் டி.எஸ்.பி. வேலுமணி, இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். #PeriyarStatue
Tags:    

Similar News