செய்திகள்

திருச்செங்கோடு அருகே மனைவியை அடித்துக் கொன்ற ரவுடி

Published On 2018-09-06 07:44 GMT   |   Update On 2018-09-06 07:44 GMT
திருச்செங்கோடு அருகே மனைவியை ரவுடி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்செங்கோடு:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள அப்தூர் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுருட்டையன் என்கிற பிரபாகரன் (வயது 33). இவரது மனைவி புனிதா (24). இவர்களுக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு பிரீத்திவிராஜ் (7) என்ற மகன் உள்ளார்.

சுருட்டையன் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை உள்பட 13 வழக்குகள் உள்ளன.

இதையடுத்து போலீசார் சுருட்டையனை கைது செய்தனர். பின்னர் குண்டர் சட்டத்தில் கைதான அவர் கோவை ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர் ஜெயிலில் இருந்து வெளியே வந்தார்.

சுருட்டையனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. குடித்துவிட்டு வந்து மனைவியை அவர் சித்ரவதை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு மகன் பிருத்திவிராஜை அவரது உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். நேற்று மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த சுருட்டையன் புனிதாவை சரமாரியாக அடித்து உதைத்தார். இதில் படுகாயம் அடைந்த புனிதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

உடனே சுருட்டையன் வீட்டை பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

நேற்று இரவு வீடு திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து திருச்செங்கோடு ருரல் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது புனிதா பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

வீட்டில் உள்ள பொருட்கள், துணிமணிகள் சிதறி கிடந்தன. புனிதாவின் உடலை போலீசார் கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சுருட்டையன் மனைவியை கொலை செய்ததற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. புனிதாவை பற்றி அக்கம் பக்கத்தில் விசாரித்த போது அவர் எப்போதும் அமைதியாக இருப்பார் என்றும் யாருடனும் எந்த பிரச்சனைக்கும் செல்லமாட்டார் என்பதும் தெரியவந்தது.

ரவுடி சுருட்டையன் தான் புனிதாவை அடிக்கடி அடித்து உதைத்ததாகவும் தெரிவித்தனர். நடத்தை சந்தேகத்தால் இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனைவியை பிரபல ரவுடி கொலை செய்த சம்பவம் திருச்செங்கோடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News