மதுரை பல்கலை. துணை வேந்தர் தேர்வுகுழு பட்டியலை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு
சென்னை:
மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லதுரை நியமனத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு, கடந்த ஜூன் 14-ந்தேதி தீர்ப்பளித்தது.
பல்கலைக்கழக சட்ட விதிகளை பின்பற்றி புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேர்வுக் குழுவை அமைத்து, மூன்று மாதங்களுக்குள் துணைவேந்தர் பதவிக்கு தகுதியானவர்கள் பெயர் பட்டியலை தயாரிக்க வேண்டும் என்றும் உத்தர விட்டிருந்தது.
இந்த உத்தரவின் நகல் கிடைக்கும் முன், விடுமுறை தினமான கடந்த ஜூன் 16-ந்தேதி பல்கலைக்கழக சிண்டிகேட்டின் அலுவல் சாரா உறுப்பினர்களாக உள்ள அரசு அதிகாரிகளின் அவசர கூட்டம் கூட்டப்பட்டு, துணைவேந்தர் தேர்வுக் குழுவுக்கு சிண்டிகேட் பிரதி நிதியாக தங்கமுத்து நியமிக்கப்பட்டார்.
தங்கமுத்து நியமனத்துக்கு தடை கோரி பல்கலைக்கழக முன்னாள் மாணவர் மகாலிங்கம் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி மணிக்குமார், நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்த போது, சட்டவிதிகளை பின்பற்றாமல், அவசர கதியில் சிண்டிகேட் பிரதிநிதி நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் மீண்டும் தகுதியில்லாதவரே துணை வேந்தராக தேர்வு செய்யக் கூடிய அபாயம் இருப்பதாகவும் மனுதாரர் தரப்பு வக்கீல் வாதிட்டார்.
இதையடுத்து, தங்கமுத்து நியமனம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நாளைக்கு (வியாழக்கிழமை) தள்ளி வைத்தனர்.