செய்திகள்

திருவல்லிக்கேணியில் மந்திரவாதியை கொன்ற பெண் அடையாளம் தெரிந்தது

Published On 2018-08-29 09:09 GMT   |   Update On 2018-08-29 09:09 GMT
சென்னை திருவல்லிக்கேணியில் ஆசிட் வீசி மந்திரவாதியை கொன்ற பெண் குறித்து அடையாளம் தெரிந்ததால் அவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சென்னை:

பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் செய்யது பஸ்ருதீன் (63).

திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் இவருக்கு சொந்த கட்டிடம் உள்ளது. இங்கு மாந்திரீக தொழில் செய்து வந்தார். தகடு, தாயத்து தயாரித்து கொடுப்பார். குறியும் சொல்லுவார்.

நேற்று முன்தினம் இரவு செய்யது பஸ்ருதீன் தனது கட்டிடத்தில் குறி சொல்லிக் கொண்டு இருந்தார். அங்கு ஏராளமான பெண்களும், ஆண்களும் இருந்தனர்.

அவர் முன்பு அமர்ந்து இருந்தவர்களில் 10 பெண்கள் பர்தா அணிந்திருந்தனர். அதில் ஒரு பெண் திடீரென்று மர்ம பொருளை சையது பஸ்ருதீன் மீது வீசினார். உடனே அவர் உடல் மளமளவென்று தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

இதனால் செய்யது பஸ்ருதீன் “அய்யோ... அம்மா” என்று அலறினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண்களும், ஆண்களும் அங்கிருந்து ஓடினார்கள். தீப்பிடிக்கும் மர்ம பொருளை வீசிய பெண்ணும் தப்பி ஓடி விட்டாள். படுகாயம் அடைந்த செய்யது பஸ்ருதீன் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுகுறித்து திருவல்லிக்கேணி போலீஸ் உதவி கமி‌ஷனர் ஆரோக்கிய பிரகாசம், இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் ஆகியோர் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இரவு இந்த சம்பவம் நடக்கும்போது யார்-யார் அங்கு இருந்தனர் என்று தகவல் சேகரித்தனர்.

பர்தா அணிந்து வந்த 10 பெண்கள் யார் என்பதையும் தீவிர விசாரணையில் கண்டுபிடித்தனர். இதில் 7 பெண்களிடம் நடத்திய விசாரணையில் அவர்களுக்கு இதில் தொடர்பு இல்லை என்பது தெரிய வந்தது.

மீதம் உள்ள 3 பெண்களில் ஒருவர்தான் மந்திரவாதி சையது பஸ்ருதீனை கொலை செய்து இருப்பது உறுதியாகி இருப்பதாக கூறப்படுகிறது. இவர் தி.நகரைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது.

அந்த பெண்ணை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கொலைக்கு காரணமான பெண் இன்று மாலை கைது செய்யப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.
Tags:    

Similar News