செய்திகள்

துப்பாக்கி சூடு சம்பவத்தின் 100-வது நாள் - கத்தோலிக்க ஆலயங்களில் சிறப்பு திருப்பலி

Published On 2018-08-29 07:47 GMT   |   Update On 2018-08-29 09:01 GMT
ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு நடைபெற்று இன்று 100-வது நாளையொட்டி தூத்துக்குடியில் உள்ள கத்தோலிக்க ஆலயங்களில் சிறப்பு திருப்பலி இன்று மாலை நடக்கிறது.
தூத்துக்குடி:

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள், போராட்டக்குழுவினர் போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த மே மாதம் 22-ந்தேதி இதன் 100-வது நாளில் கலெக்டர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக செல்ல முடிவு செய்தனர்.

இதற்கு போலீசார் அனுமதி வழங்காததால் போராட்டத்தில் தடியடி, துப்பாக்கி சூடு நடைபெற்றது. இதில் 13 பேர் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு, ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை அமைத்துள்ளது.

இந்நிலையில் துப்பாக்கி சூடு நடைபெற்று இன்று 100-வது நாளையொட்டி தூத்துக்குடி பனிமய மாதா ஆலயம் மற்றும் சின்னகோவிலில் சிறப்பு திருப்பாலி நடத்த முடிவு செய்தனர். ஆனால் இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா அனுமதி வழங்கவில்லை.

இதையடுத்து அவர்கள் தூத்துக்குடியில் உள்ள கத்தோலிக்க ஆலயங்களில் தனித்தனியாக சிறப்பு திருப்பலி இன்று மாலை 6 மணிக்கு நடத்துவதாக அறிவித்துள்ளனர். இதையடுத்து அசம்பாவித சம்பவங்கள் நடைபெறா வண்ணம் தூத்துக்குடியில் போலீஸ் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News