செய்திகள்
விபத்துக்குள்ளான லோடு ஆட்டோ - கார்

குன்னத்தூர் அருகே சரக்கு ஆட்டோ மீது கார் மோதி 4 பேர் பலி

Published On 2018-08-23 03:32 GMT   |   Update On 2018-08-23 05:22 GMT
திருப்பூரில் இன்று காரும் சரக்கு ஆட்டோவும் மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். #TirupurAccident
குன்னத்தூர்:

திருப்பூரை சேர்ந்தவர்கள் ஜெகநாதன் (33), முனிஸ்வரன் (35), பிரவின் (24), சுப்பு (50). இவர்கள் 4 பேரும் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர்.

இவர்களது நண்பர் ஒருவர் கையில் அடிபட்டு ஈரோடு மாவட்டம் கோபியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்க்க ஜெகநாதன் உள்ளிட்ட 4 பேரும் நேற்று மாலை ஒரு காரில் கோபி சென்றனர்.

நண்பரை பார்த்து விட்டு அவர்கள் திருப்பூர் திரும்பி கொண்டு இருந்தனர். காரை பிரவின் ஓட்டி வந்தார். இந்த கார் குன்னத்தூர் அருகே உள்ள நெட்டிச்சிப்பாளையம் பிரிவு அருகே இரவு 8.30 மணியளவில் வந்து கொண்டிருந்தது.

அப்போது அந்த வழியாக லோடு ஆட்டோ வந்தது. திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து லோடு ஆட்டோ மீது மோதியது. பின்னர் கட்டுக்குள் வராமல் அருகில் இருந்த பயணிகள் நிழற்குடையில் புகுந்து ரோடு ஓரம் இருந்த புளியமரத்தில் மோதி நின்றது.

இந்த விபத்தில் காரில் வந்த ஜெகநாதன், முனிஸ்வரன், பிரவின்,சுப்பு, லோடு ஆட்டோ டிரைவர் தண்ணீர் பந்தல்பாளையம் சின்னசாமி (46), பஸ் நிழற்குடையில் நின்று கொண்டிருந்த பொங்கியண்ணன் (22), இளவரசி (18) ஆகிய 6 பேர் பலத்த படுகாயம் அடைந்தனர்.

விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் குன்னத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அப்பகுதி பொதுமக்களும் திரண்டனர். அவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பொங்கியண்ணன், இளவரசி ஆகியோர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ஜெகநாதன், முனிஸ்வரன், பிரவின், சுப்பு, சின்னசாமி ஆகியோர் கோபி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் ஜெகநாதனும், முனிஸ்வரனும் நேற்று இரவு 10.30 மணிக்கு பரிதாபமாக இறந்தனர். இரவு 11.30 மணிக்கு பிரவினும், இன்று அதிகாலை 3.30 மணிக்கு சுப்புவும் சிகிச்சை பலன் இன்றி இறந்தனர்.

பலியான ஜெகநாதன் திருப்பூர் பிச்சம் பாளையத்தையும், சுப்பு பூலுவபட்டியையும் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

படுகாயம் அடைந்த லோடு ஆட்டோ டிரைவர் சின்னசாமி கோபி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். கார் வேகமாக வந்ததே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.

கோபியில் இருந்து கார் கிளம்பிய போதே தறி கெட்டு ஓடி வந்ததாகவும் கோபி பகுதியில் 2 இடத்தில் விபத்தில் சிக்க இருந்ததாகவும் சக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

எனவே காரில் இருந்தவர்கள் குடி போதையில் இருந்தார்களா? என்பது பிரேத பரிசோதனைக்கு பின்னர் தான் தெரிய வரும். விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் குன்னத்தூர், திருப்பூர்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #TirupurAccident
Tags:    

Similar News