செய்திகள் (Tamil News)
மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவராக வேண்டும்- திமுக வடக்கு மாவட்ட கூட்டத்தில் தீர்மானம்
தொண்டர்கள் எண்ணத்தை நிறைவேற்ற மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவராக வேண்டும் என்று திமுக வடக்கு மாவட்ட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. #mkstalin
கவுந்தப்பாடி:
ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் கவுந்தப்பாடியில் நடந்தது. மாவட்ட செயலாளர் நல்லசிவம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அனைத்து அணிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மறைந்த தி.மு.க. தலைவர், முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
புயல் அடித்த போதும், பூகம்பம் நிகழ்ந்த போதும், துரோகங்கள் சூழ்ந்த போதும் கழகத்தை கட்டி காத்தவர் தலைவர் கருணாநிதி ஆவார். 95 வயதில் 81 ஆண்டு காலம் மொழி, இனம், நாடு, சமூக நீதி என அயராது உழைத்தவர் கருணாநிதி என புகழாரம் சூட்டப்பட்டது.
தலைவரின் பிரிவால் வாடும் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நாம் எப்போதும் உறுதுணையாக இருக்க வேண்டும். கலைஞருக்கு பிறகு கழகத்தை கட்டி காக்க வழி நடத்த 1½ கோடி கழக தொண்டர்களின் ஏகோபித்த எண்ணத்தை நிறைவேற்ற செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. #mkstalin