கோபியில் பள்ளிக்கூடம் சென்ற 2 மாணவர்கள் மாயம்- போலீசார் தேடுகிறார்கள்
கோபி:
கோபி மொடச்சூர் பெரியார்நகர் வீதியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. இவரது மகன் சரண் (வயது 14). அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.
அதே பகுதி நஞ்சப்பா வீதியை சேர்ந்தவர்கோபாலகிருஷ்ணன்.இவரது மகன் ஸ்ரீராம் (14) இவனும் அதே பள்ளியில் படித்து வருகிறான். இரு மாணவர்களும் நண்பர்கள்.
கடந்த 11-ந் தேதி நண்பர்கள் இருவரும் பள்ளிக் கூடம் சென்றனர். ஆனால் மாலை வீடு திரும்பி வர வில்லை. அவர்கள் எங்கு சென்றார்கள்? என்ன ஆனார்கள்? என்று தெரியவில்லை.
மேலும் நண்பர்கள் வீடு உறவினர் வீடுகளில் தேடியும் மாணவர்கள் கிடைக்க வில்லை. இதனால் பதட்டம் அடைந்த சரணின் தந்தை வெள்ளியங்கிரி இதுகுறித்து கோபி போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான 2 மாணவர்களையும் தேடி வருகிறார்கள்.
பாடம் படிக்க கஷ்டமாக இருந்ததால் வீட்டை விட்டு வெளியேறினார்களா? வேறு என்ன காரணத்துக்காக மாயமானார்கள்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி மாயமான மாணவர்களை தேடி வருகிறார்கள்.