செய்திகள்

வடபழனி தனியார் ஆஸ்பத்திரியில் ஆபரே‌ஷன் செய்த பேராசிரியை பலி

Published On 2018-08-09 12:52 IST   |   Update On 2018-08-09 12:52:00 IST
சென்னை வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஆபரேஷன் செய்த பேராசிரியை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அவரது கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

போரூர்:

அம்பத்தூர் பானு நகர் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் கோமகன் அறிவுடைநம்பி.

குஜராத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி நிர்மலா. தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்த அவர் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு அப்பணியில் இருந்து நின்று விட்டார்.

நிர்மலாவுக்கு நுரையீரலில் சளி தொல்லை இருந்தது. இதற்கு சிகிச்சை பெறுவதற்காக அவரை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கணவர் கோமகன் அறிவுடைநம்பி அழைத்து சென்றார்.

நிர்மலாவை பரிசோதித்த டாக்டர்கள், அவருக்கு சிறிய அளவிலான லேசர் ஆபரே‌ஷன் சிகிச்சை அளித்து குணப்படுத்தலாம் என்று கூறினர். இதற்கு கணவன்-மனைவி இருவரும் சம்மதித்தனர்.

இதையடுத்து நிர்மலாவுக்கு லேசர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் திடீரென்று உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த கோமகன் அறிவுடைநம்பி கே.கே.நகர் போலீசில் தனியார் ஆஸ்பத்திரி மீது புகார் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

கடந்த 3-ந்தேதி எனது மனைவி நிர்மலாவுக்கு நுரையீரல் சளி தொல்லை பிரச்சனைக்காக வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தேன். சிறிய அளவிலான லேசர் சிகிச்சையை டாக்டர்கள் செய்தனர்.

அப்போது திடீரென்று நிர்மலாவுக்கு ரத்த போக்கு அதிகமாக இருக்கிறது என்றும் ரத்தம் கொடுக்க வேண்டும் என்று கூறினார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த நான் லேசர் சிகிச்சையில் ஏன் ரத்த போக்கு ஏற்படுகிறது என்றேன். ஆனால் ரத்தம் அவசரமாக தேவைப்படுகிறது என்று கூறினார்கள். இதையடுத்து ரத்தம் ஏற்பாடு செய்தோம்.

அதன்பின் எனது மனைவிக்கு கழுத்தில் ஆபரே‌ஷன் செய்திருந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை அவர் திடீரென்று இறந்து விட்டார். டாக்டர்கள் அளித்த தவறான சிகிச்சையால் எனது மனைவி இறந்து உள்ளார். லேசர் சிகிச்சையின் போது ரத்த குழாயை துண்டித்து இருப்பதாக தெரிகிறது. எனவே தவறான சிகிச்சை அளித்த ஆஸ்பத்திரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News