செய்திகள்

ராணிப்பேட்டையில் மாயமான கிராம நிர்வாக அலுவலர் மகள் சென்னையில் மீட்பு

Published On 2018-07-29 15:16 GMT   |   Update On 2018-07-29 15:16 GMT
ராணிப்பேட்டையில் மாயமான கிராம நிர்வாக அலுவலர் மகள் சென்னை ரெயில் நிலையத்தில் மீட்கப்பட்டார்.

ஆற்காடு:

ராணிப்பேட்டை சிப்காட் ராஜாஜி தெரு ஐ.ஓ.பி. நகரை சேர்ந்தவர் துளசிராமன். ராணுவ வீரராக பணியாற்றி வந்த இவர், இறந்துவிட்டார். துளசி ராமனின் மனைவி ராஜேஸ்வரி (வயது 32). கலவை அடுத்த முள்ளுவாடி கிராம நிர்வாக அலுவலராக உள்ளார்.

இவர்களது மகள் சுபிக்ஷா (10) ராணிப்பேட்டை மணியம்பட்டு கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கிறார். நேற்று முன்தினம் காலை சிறுமி சுபிக்ஷா பள்ளிக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பினார்.

பின்னர் வீட்டின் அருகே விளையாட சென்ற சிறுமி திடீரென மாயமாகி விட்டார். இதுகுறித்து சிப்காட் போலீசில் ராஜேஸ்வரி புகார் அளித்தார். சிறுமியை மர்ம நபர்கள் கடத்தி சென்றிருக்கலாம் என தகவல் பரவியது. போலீசார் சிறுமியை தீவிரமாக தேடி வந்தனர்.

இதற்கிடையே சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் நேற்று மாலை சிறுமி சுபிக்ஷா தனியாக நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ரெயில்வே போலீசார் சிறுமியை மீட்டு சிப்காட் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சிப்காட் போலீசார் மற்றும் தாய் ராஜேஸ்வரி சென்னை சென்று சிறுமியை மீட்டனர். சிறுமி கடத்தப்பட்டாரா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News