வெளிநாட்டு கப்பலில் பணிபுரிந்த வாணியம்பாடி வாலிபர் மர்ம மரணம்
திருப்பத்தூர்:
வாணியம்பாடி அடுத்த ஓமகுப்பத்தை சேர்ந்தவர் அசோகன் (33). இவரது மனைவி வித்யா (27). இவர் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது கணவர் அசோகன், கடந்த மே மாதம் 18-ம் தேதி சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான கப்பலில் மோட்டார் இயக்கும் வேலைக்கு 9 மாத ஒப்பந்த அடிப்படையில் சென்றார்.
மே 20-ந்தேதி பணியில் சேர்ந்து விட்டதாக கூறி வாட்ஸ்- அப் மூலம் தெரிவித்தார். அதன் பிறகு தினந்தோறும் செல்போனில் என்னிடம் பேசி வந்தார்.
கடந்த ஜூன் மாதம் 20-ம் தேதி கப்பலில் குற்றச் செயல்கள் நடை பெறுகின்றன. இதனை தட்டிக் கேட்டபோது, சிலரால் மிரட்டப்படுவதாக கூறினார். இதையடுத்து, வேலையை விட்டு விட்டு சொந்த ஊருக்கு வந்து விடுமாறு நான் கூறினேன். ஆனால் ஒப்பந்தம் முடியாமல் அனுப்ப மாட்டார்கள். ஒப்பந்த காலம் முடிந்த பிறகு வந்து விடுகிறேன் என்று கூறினார்.
கடைசியாக 14-ம் தேதி பேசினார். அதன் பிறகு என்னால் எனது கணவரின் செல்போனை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதற்கிடையில் கடந்த 17-ம் தேதி எனது கணவருடன் பணி புரியும் ஒருவர் என்னுடைய செல்போனுக்கு தொடர்பு கொண்டு எனது கணவர் கப்பலில் தற்கொலை செய்து கொண்டார்.
தற்போது கப்பல் வெகு தொலைவில் இருப்பதால் ஜூலை 20-ந்தேதி தென் ஆப்பிரிக்கா நாட்டுக்கு வரும், அங்கிருந்து 4 நாட்களில் அசோகன் உடன் மும்பைக்கு வந்தடையும். பின்னர் அங்கு வந்து உடலை பெற்றுக் கொள்ளுங்கள் எனக் கூறினார்.
இதைக் கேட்ட நான் அதிர்ச்சியடைந்து, அவர் எப்படி உயிரிழந்தார் என கேட்டபோது இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதன் பிறகு எந்த தகவலும் இல்லை.
இதற்கிடையில், கடந்த 23-ந்தேதி மும்பையை சேர்ந்த சாந்த குமார் என்பவர், எங்கள் கிராமத்துக்கு வந்து எனது கணவரை பற்றி விசாரித்து விட்டுச் சென்றுள்ளார்.
ஆனால், என்னிடம் எந்த விசாரணையும் நடத்த வில்லை. எனவே, எனது கணவர் மரணத்தில் நிறைய சந்தேகங்கள் உள்ளன.
தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு அவர் கோழையல்ல. கப்பலில் நடக்கும் தவறுகள் பற்றி அவர் என்னிடம் பேசியுள்ள ஆடியோஆதாரம் உள்ளது.
அதன்படி பார்த்தால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. எனவே எனது கணவர் மரணத்துக்கான காரணத்தையும், அதற்கு காரணமானவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், எனது கணவர் உடலை விரைவாக கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து கலெக்டர் ராமன் மூலம் இந்திய தூதரகத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தூதரகம் மூலம் அசோகனின் உடலை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாளை சொந்த ஊருக்கு உடல் கொண்டு வரப்படும் என போலீசார் தெரிவித்தனர்.