செய்திகள்

கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு கூடுதல் தண்ணீர் திறப்பு

Published On 2018-07-28 05:38 GMT   |   Update On 2018-07-28 05:38 GMT
கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 2200 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுவதால் ஏரிக்கு அதிகமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு வாரத்துக்குள் வீராணம் ஏரி நிரம்பி விடும் என கூறப்படுகிறது. #VeeranamLake
ஸ்ரீமுஷ்ணம்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும். விவசாயிகளின் உயிர் நாடியாக விளங்கும் இந்த ஏரி மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அது மட்டுமின்றி சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 72 கன அடி தண்ணீர் அனுப்பப்படும்.

ஏரியின் நீர்மட்டம் குறைந்ததால் கடந்த மார்ச் மாதம் 21-ந் தேதி வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது. நீர் வரத்து இல்லாததால் கடந்த 5 மாதங்களாக வீராணம் ஏரி முற்றிலும் வறண்டு காணப்பட்டது. பாசனத்துக்கு தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் அவதி அடைந்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடகாவில் பெய்த கன மழை காரணமாக காவிரி உபரிநீர் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்தடைந்தது. அங்கிருந்து கடந்த 19-ந் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. கல்லணைக்கு வந்த தண்ணீர் கடந்த 26-ந் தேதி கீழணைக்கு திறக்கப்பட்டது.

கீழணையில் இருந்து நேற்று முன்தினம் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று மாலை அது 2200 கனஅடியாக உயர்த்தப்பட்டது. இதனால் வீராணம் ஏரிக்கு அதிகமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு வாரத்துக்குள் வீராணம் ஏரி நிரம்பி விடும் என கூறப்படுகிறது.

வீராணம் ஏரி நிரம்பிய பின்னர் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.  #VeeranamLake
Tags:    

Similar News