செய்திகள்

கிறிஸ்டி நிறுவன கிளைகளில் 3-வது நாளாக சோதனை- 10 கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல்

Published On 2018-07-07 10:16 GMT   |   Update On 2018-07-07 10:16 GMT
சத்துணவு முட்டை விநியோகம் செய்யும் கிறிஸ்டி புட்ஸ் நிறுவன கிளைகளில் வருமான வரித்துறையினர் நடத்தி வரும் சோதனையில் இதுவரை 10 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சென்னை:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் கிறிஸ்டி புட்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், பள்ளிகள், அங்கன்வாடிகளுக்கு தேவையான முட்டைகளை ஒப்பந்த அடிப்படையிலும், சத்து மாவு, பருப்பு வகைகள் போன்றவற்தை தயாரித்தும் மொத்தமாக வழங்கி வருகிறது.

இந்த நிறுவனம் கிளை நிறுவனங்களிடம் உணவு பொருட்கள் வாங்கியதாக பல கிளை நிறுவனங்களை போலியாக உருவாக்கி அதன் மூலம் பல கோடி ரூபாய் கணக்கு காட்டி மத்திய அரசுக்கு வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்ததது.

இது தொடர்பாக வருமான வரித்துறையினர் பல்வேறு கட்ட விசாரணை மற்றும் ஆவணங்களை சரிபார்த்த பிறகு, கடந்த 5-ந் தேதி அதிகாலை முதல் கிறிஸ்டி புட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான நிறுவனங்கள் உள்பட நாடு முழுவதும் 72 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் இறங்கினர்.

அப்போது போலி நிறுவனங்களுக்கான ஆவணங்களும், அதற்காக யார், யாருக்கு பணம் கொடுக்கப்பட்டது என்பது தொடர்பான ஆவணங்களும் வருமான வரித்துறையினரிடம் சிக்கியதாக கூறப்படுகிறது. மூன்றாவது நாளாக இன்றும் சோதனை நீடிக்கிறது.

இந்தி சோதனையின்போது இதுவரை 10 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டதால், வருமான வரித்துறையின் பிடி இறுகி உள்ளது. #Eggnutritioncorruption
Tags:    

Similar News