செய்திகள்
பள்ளி வேன் மோதியதில் சேதம் அடைந்த ஆட்டோ.

கோவில்பட்டியில் தறிகெட்டு ஓடிய பள்ளி வேன் மோதி ஆட்டோ டிரைவர் பலி

Published On 2018-07-02 09:01 GMT   |   Update On 2018-07-02 09:01 GMT
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தறிகெட்டு ஓடிய பள்ளி வேன் மோதிய விபத்தில் ஆட்டோ டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவில்பட்டி:

கோவில்பட்டியில் ஒரு தனியார் பள்ளி வேன் இன்று காலை பள்ளிக்கு குழந்தைகளை ஏற்றி கொண்டு சென்றது. கோவில்பட்டி தலைமை தபால் அலுவலகம் அருகே வேன் சென்ற போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது.

இதை பார்த்த பொது மக்கள் அலறியடித்து ஓடினார்கள். அங்கும் இங்குமாக ஓடிய வேன் ரோட்டோரம் நின்ற 3 ஆட்டோக்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் ஆட்டோக்கள் நொறுங்கி சேதம் அடைந்தது. ஆட்டோவில் இருந்த டிரைவர் கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டங்குளத்தை சேர்ந்த தங்கராஜ் (வயது40) என்பவர் வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்த சம்பவத்தின் போது சாலையோரம் நின்ற நாகலாபுரம் புதூரை சேர்ந்த துப்புரவு தொழிலாளி மாரிச்சாமி, சுப்பிரமணியபுரம் சுப்பிரமணியன், பழக்கடைக்காரர் கோவிந்தராஜ், கட்டிட தொழிலாளிகள் கண்ணன், செல்வக்குமார் ஆகிய 5 பேர் பலத்த காயம் அடைந்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

விபத்து நடந்த இடத்தில் திரண்ட மக்கள் கூட்டம்.

இதில் கோவிந்தராஜ், கண்ணன், செல்வகுமார் ஆகியோர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையிலும் மற்ற 2 பேர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்கள். பலியான தங்கராஜ் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து தனியார் பள்ளி வேன் டிரைவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

இந்த சம்பவம் கோவில்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
Tags:    

Similar News