செய்திகள்

தஞ்சையில் காய்கறி வியாபாரியை வெட்டிய 4 பேர் கும்பல்- ஆஸ்பத்திரியில் சிகிச்சை

Published On 2018-06-20 14:32 GMT   |   Update On 2018-06-20 14:32 GMT
தஞ்சையில் பொதுமக்கள் கூடும் மார்க்கெட்டு முன்பு வியாபாரியை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர்:

தஞ்சை வடக்குவாசல் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 27). இவர் தஞ்சை காமராஜர் மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் இன்று காலை 8 மணியளவில் அரவிந்த், தனது மோட்டார் சைக்கிளில் மார்க்கெட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மார்க்கெட் முன்பு வந்த போது, 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கும்பல் திடீரென வழிமறித்தனர்.பின்னர் அவர்கள் 4 பேரும், அரவிந்தை சர மாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் அவருக்கு கை, கால்களில் வெட்டு விழுந்தது.

இதனால் அரவிந்த் ‘ காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்..’ என்று கூச்சல் போட்டார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பற்றி தஞ்சை மேற்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் , குடும்ப பிரச்சினை காரணமாக அரவிந்த் மீது மர்ம கும்பல் வெட்டியது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

பட்டப்பகலில் பொதுமக்கள் கூடும் மார்க்கெட்டு முன்பு வியாபாரியை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டிய சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News