செய்திகள்

மரக்காணம் அருகே டேங்கர் லாரி மீது மினிலாரி மோதி விபத்து- 2 பேர் பலி

Published On 2018-06-20 06:41 GMT   |   Update On 2018-06-20 06:41 GMT
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே டேங்கர் லாரி மீது மினிலாரி மோதிய விபத்தில் 2 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மரக்காணம்:

காஞ்சீபுரம் மாவட்டம் கடப்பாக்கத்தை அடுத்த செம்பிலியாபுரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 45). டிரைவர்.

இவர் மினிலாரியில் மாம்பழம் ஏற்றி கொண்டு கடப்பாக்கம் பகுதியில் இருந்து புதுவைக்கு புறப்பட்டார்.

மினிலாரியில் கடப்பாக்கம் பகுதியை சேர்ந்த சண்முகம் (40) என்பவரும் வந்தார். அந்த மினிலாரி இன்று அதிகாலை விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள செட்டி நகர் பஸ் நிறுத்தம் பகுதியில் வந்து கொண்டிருந்தது.

அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி தாறுமாறாக ஓடி எதிரே வந்த டேங்கர் லாரி மீது மோதி சாலையோரத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் மினிலாரியின் இடிபாட்டிற்குள் சிக்கிய கண்ணன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். சண்முகம் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மரக்காணம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மைக்கேல் இருதயராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயம் அடைந்த சண்முகத்தை மீட்டு சிகிச்சைக்காக புதுவை தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் சண்முகம் பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்தினால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News