செய்திகள்
சேதப்படுத்தப்பட்ட சிலைகள்.

காரியாபட்டி அருகே கோவில் சிலைகள் உடைப்பு- ராணுவ வீரர் கைது

Published On 2018-06-14 04:16 GMT   |   Update On 2018-06-14 04:16 GMT
காரியாபட்டி அருகே கோவில் சிலைகள் உடைக்கப்பட்டன. இது தொடர்பாக ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.
காரியாபட்டி:

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ளது மாங்குளம். இங்குள்ள செண்பக மூர்த்தி கோவிலில் நாளை களரி திருவிழா நடைபெற உள்ளது. திருவிழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வந்தன.

இந்த நிலையில் 5 பேர் கொண்ட கும்பல் நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்து அங்கிருந்த செண்பக மூர்த்தி, ராக்காயி அம்மன் உள்பட 7 சிலைகளை உடைத்து சேதப்படுத்தி விட்டு தப்பிச் சென்று விட்டது.

இன்று காலை கோவிலுக்கு வந்த பூசாரி மற்றும் பக்தர்கள் சிலைகள் உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

சிலை உடைப்பு குறித்து ஆதியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கோவில் சிலைகளை சேதப்படுத்தியது அதே பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் ஆபிரகாம் லிங்கன், ராஜா மற்றும் 3 பேர் என்பது தெரியவந்தது.

இவர்களில் ஆபிரகாம் லிங்கன் மட்டும் சிக்கினார். அவரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். ஆபிரகாம் லிங்கன் மீரட்டிலும், ராஜா நாக்பூரிலும் பணியாற்றி வருகின்றனர்.

கோவில் பூசாரியை மாற்ற வேண்டும் என்று சிலர் கூறி வந்த நிலையில் சிலைகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டு இருப்பதாக பக்தர்கள் தெரிவித்தனர். #Tamilnews
Tags:    

Similar News