செய்திகள்

திண்டுக்கல் நகர் பகுதியில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் வியாபாரிகள்

Published On 2018-06-09 16:28 IST   |   Update On 2018-06-09 16:28:00 IST
திண்டுக்கல் நகர் பகுதியில் பத்து ரூபாய் நாணயங்களை வியாபாரிகள் வாங்க மறுப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். #10Rupeescoin

திண்டுக்கல்:

திண்டுக்கல் நகர் பகுதியில் 10 ரூபாய் நாணயங்களை வியாபாரிகள் வாங்க மறுப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பணத்தின் மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருவதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு பயன்படுத்திய 25 பைசா, 50 பைசா ஆகியவற்றை செல்லாத காசாக நினைத்து மக்கள் வாங்க மறுக்கிறார்கள். கடந்த ஆண்டு கருப்பு பணத்தை ஒழிக்கும் வகையில் பிரதமர் மோடி புதிய ரூபாய் நோட்டுகளை அறிவித்தார்.

இதில் 2000 ரூபாய், 10 ரூபாய் நோட்டுகளில் பிரச்சனை எழுகிறது. அது நல்ல நோட்டா, டம்மி நோட்டா எனத் தெரியாமல் பொதுமக்கள் தவித்தபடி உள்ளனர். இந்த சூழ்நிலையில் தற்போது ஏராளமான 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது.

இதனை அனைவரும் வாங்கி பயன்படுத்தலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஆனால் திண்டுக்கல் நகர் பகுதியில் சிறு மற்றும் குறு வியாபாரிகள், மளிகை கடைகளில் 10 ரூபாய் நாணயங்களை வியாபாரிகள் வாங்க மறுக்கிறார்கள்.

டீக்கடைகளில் கூட 10 ரூபாய் நாணயத்தை உற்றுப்பார்த்து திருப்பி கொடுத்து விடுகிறார்கள். நெல்லை போன்ற நகரங்களில் 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் உள்ளது. அங்குள்ள மக்கள் சர்வ சாதாரணமாக இந்த நாணயங்களை வாங்குகிறார்கள். ஆனால் திண்டுக்கல் வியாபாரிகள் மட்டும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கிறார்கள்.

இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், 10 ருபாய் நாணயங்களை வாங்குவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால் இதனை வாங்கி வங்கியில் செலுத்த முயலும் போது அவர்கள் வாங்க மறுக்கிறார்கள். எனவே இதனை ஒரு முடிவுக்கு கொண்டு வர மாவட்ட கலெக்டர் மற்றும் வங்கி நிர்வாகம்தான் முடிவு செய்ய வேண்டும் என்றனர். #10Rupeescoin

Tags:    

Similar News