செய்திகள்

நெய்வேலியில் என்.எல்.சி. அதிகாரி கடத்தி கொலை: பிணம் தோண்டி எடுப்பு

Published On 2018-06-09 10:00 GMT   |   Update On 2018-06-09 10:00 GMT
என்.எல்.சி. அதிகாரி கடத்தி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர்:

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி. குடியிருப்பில் வசித்து வந்தவர் அசோக்குமார். (வயது 55). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர் என்.எல்.சி. மனித வளத்துறை அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் வீட்டில் இருந்து வெளியில் சென்று வருவதாக கூறி சென்ற அவர் வீடு திரும்ப வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர் ஆனால், கண்டுபிடிக்க முடியவில்லை.

இது குறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் அசோக்குமாரின் அண்ணன் சப்‌ஷன் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையின் போது மாயமான அசோக்குமாரின் வங்கி கணக்கில் இருந்து 15 லட்சம் ரூபாய் வரை எடுக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

அவர் மாயமான பின்னர் அவரது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்திருப்பது தொடர்பாக அசோக்குமாரின் நண்பர்களான நெய்வேலி இந்திரா நகரை சேர்ந்த சுரேஷ் (38), வடலூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (36) ஆகிய 2 பேரிடம் சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் உடனே அவர்களை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்தனர்.

அசோக்குமாரை கடத்தி கொலை செய்ததை சுரேஷ் ஒப்புக்கொண்டார். அசோக்குமாரின் உடலை குறிஞ்சிப்பாடி அடுத்த பெத்தான்குப்பத்தில் உள்ள இளங்கோ என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள மீன்குட்டையில் புதைத்துள்ளதாக கூறினார்.

மேலும் அசோக்குமாரின் ஏ.டி.எம். கார்டை எடுத்து அதன் ரகசிய எண்ணை தெரிந்து கொண்டு அவரது வங்கி கணக்கில் பணம் எடுத்ததையும் ஒப்புக் கொண்டார்.

இதைத்தொடர்ந்து போலீசார் சுரேஷ், ராஜேஷ் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.அதன் பின்னர் சுரேசை அழைத்து கொண்டு அசோக்குமார் உடல் புதைக்கப்பட்ட இடத்துக்கு இன்று சென்றனர்.

அங்கு சென்றதும் அசோக்குமார் உடல் புதைக்கப்பட்ட இடத்தை சுரேஷ் அடையாளம் காட்டினார். அதன் பின்னர் வருவாய் அதிகாரிகள் அனுமதியுடன் போலீசார் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் அசோக்குமாரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. அந்த உடல் அழுகிய நிலையில் இருந்தது.

பின்னர் அந்த உடலை புதுவை தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர்.

என்.எல்.சி. அதிகாரி கடத்தி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News