செய்திகள்
நடுரோட்டில் ஏற்பட்ட பள்ளத்தை பார்வையிட்ட பொதுமக்கள்

ஊட்டியில் நடுரோட்டில் இடி விழுந்து திடீர் பள்ளம் - பொதுமக்கள் அதிர்ச்சி

Published On 2018-06-06 04:22 GMT   |   Update On 2018-06-06 04:22 GMT
ஊட்டியில் நடுரோட்டில் இடி விழுந்ததில் ரோட்டின் நடுவில் 15 அடி ஆழத்தில், 12 அடி அகலத்தில் ‘திடீர்’ பள்ளம் உண்டானது. இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழை காரணமாக முக்கிய அணைகள், ஏரிகள் மற்றும் குளங்கள் நிரம்பிய நிலையில் உள்ளது. நேற்று மாலை ஊட்டி அருகே உள்ள எப்பநாடு பகுதியில் மழை பெய்து கொண்டு இருந்தது. அப்போது திடீரென எப்பநாடு-கொடரெட்டி ரோட்டில் இடி தாக்கியது. இதில் திடீர் பள்ளம் ஏற்பட்டு அதில் இருந்து நிலத்தடி நீர் பொங்கி வெளியே வந்தது.

இதனை பார்த்து அந்த பகுதியை சேர்ந்த மக்கள் ஆச்சர்யமடைந்தனர். சிறிது நேரத்தில் தண்ணீர் நின்றது. பின்னர் பொதுமக்கள் பார்த்த போது இடி விழுந்ததில் ரோட்டின் நடுவில் 15 அடி ஆழத்தில், 12 அடி அகலத்தில் பள்ளம் ஏற்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனை பார்த்து பொது மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இரவு நேரம் ஆகிவிட்டதாலும் தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து வந்ததாலும், உடனடியாக பள்ளத்தை மூட முடியாத நிலை ஏற்பட்டது. எனவே பொதுமக்கள் மற்றும் வன விலங்குகள் பள்ளத்தில் விழுந்து விடாதவாறு தடுப்புகள் அமைத்து இரும்பு தகடால் பள்ளத்தை மூடினர்.தொடர்ந்து இன்று காலை முதல் பள்ளத்தை மணல் போட்டு மூடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



Tags:    

Similar News