செய்திகள்

புளியந்தோப்பில் வக்கீலின் தந்தை வெட்டிக்கொலை- 3 பேர் கும்பல் வெறிச்செயல்

Published On 2018-06-05 04:44 GMT   |   Update On 2018-06-05 04:44 GMT
புளியந்தோப்பில் இன்று காலை வக்கீலின் தந்தையை 3 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெரம்பூர்:

புளியந்தோப்பு நரசிம்மன் நகரைச் சேர்ந்தவர் சம்பத். வக்கீல். இவரது தந்தை ராதா (வயது60).

இன்று அதிகாலை 5 மணிக்கு ராதா சாஸ்திரி நகர்- திரு.வி.க.நகர் சந்திப்பில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது 3 மர்ம மனிதர்கள் அரிவாளுடன் அங்கு வந்தனர்.

அவர்கள் திடீரென்று ராதாவை சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள். தலை, கழுத்து, மார்பு உள்ளிட்ட பல இடங்களில் வெட்டு விழுந்த ராதா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

உடனே அக்கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. அதிகாலையில் அங்கு டீ குடித்துக் கொண்டிருந்த பொதுமக்கள் கொலையை பார்த்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

இதுகுறித்து புளியந்தோப்பு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ராதாவின் உடலை கைப்பற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தப்பி ஓடிய 3 பேரை பிடிக்க போலீசார் உஷார்ப்படுத்தப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

வக்கீலின் தந்தை கொடூரமாக கொலை செய்யப்பட்டது ஏன்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ராதாவுக்கும், வேறு யாருக்காவது ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கூலிப்படையை ஏவி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வக்கீல் சம்பத்துடன் ஏற்பட்ட தகராறில் அவரை பழிவாங்க தந்தை ராதாவை கொலை செய்தார்களா? என்று விசாரிக்கிறார்கள்.

இது தொடர்பாக வக்கீல் சம்பத்திடம், அவருக்கு யாராவது விரோதிகள் இருக்கிறார்களா? என்று விசாரித்து வருகிறார்கள்.

வக்கீல் தந்தை வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
Tags:    

Similar News