செய்திகள்

கள்ளக்குறிச்சியில் கள்ளக்காதலில் ஈடுபட்ட வாலிபர் வெட்டிக்கொலை- 3 பேர் சிக்கினர்

Published On 2018-05-04 10:11 GMT   |   Update On 2018-05-04 10:11 GMT
கள்ளக்காதல் பிரச்சினையில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி:

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள உடையார்நாச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன் (வயது 40). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி விஜயா (30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

அதே பகுதியை சேர்ந்தவர் மணிவேல் (26), கூலி வேலை பார்த்து வந்தார். இவருக்கும், விஜயாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது கள்ளக்காதலாக மாறியது.

இந்த நிலையில் வெளி நாட்டில் வேலை செய்து வந்த அன்பழகன் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சொந்த ஊர் வந்தார்.

தனது மனைவி விஜயாவுக்கும், வாலிபர் மணி வேலுவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர் வாலிபர் மணிகண்டனை சந்தித்து, தனது மனைவியுடன் பேசக் கூடாது என்று எச்சரித்தார்.

இருப்பினும் மணிவேல் தனது கள்ளக்காதலை கைவிடவில்லை என்று தெரிகிறது.

இன்று காலை 11 மணிக்கு அங்குள்ள காட்டுப் பகுதிக்கு மணிவேல் சென்றார். அப்போது அங்கு மறைந்திருந்த 8 பேர் கொண்ட கும்பல் மணிவேலை சுற்றி வளைத்தது. அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் மணிவேல் கூச்சலிட்டு அலறினார். இதில் பலத்த காயம் அடைந்த மணிவேல் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதற்கிடையே மணிவேலின் சத்தம் கேட்டு காட்டுப்பகுதியில் இருந்தவர்கள் அங்கு ஓடிவந்தனர். இதைப்பார்த்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. இதில் 3 பேரை அவர்கள் மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர். மீதி 5 பேர் தப்பி ஓடி விட்டனர்.

பிடிபட்ட 3 பேரையும் வரஞ்சரம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் நெய்வேலி 21-வது வட்டத்தைச் சேர்ந்த கதிர்வேல் (22), பார்த்திபன் (19), சுதாகர் (18) என்பது தெரியவந்தது. இவர்கள் அனைவரும் கூலிப்படையை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

தப்பி ஓடிய 5 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்காதல் பிரச்சினையில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News