செய்திகள்

கனரா வங்கியில் ரூ.1 கோடி மதிப்பிலான நகை மோசடியில் வங்கி மேலாளர் சஸ்பெண்டு

Published On 2018-05-03 04:52 GMT   |   Update On 2018-05-03 04:52 GMT
தேனியில் ரூ.1 கோடி மதிப்பிலான நகை மோசடியில் கனரா வங்கி மேலாளர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
தேனி:

தேனி ரூ.1 கோடி மதிப்பிலான நகை மோசடியில் கனரா வங்கி மேலாளர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

தேனியை சேர்ந்தவர் மாதவன். இவர் மதுரை சாலையில் உள்ள கனரா வங்கி கிளையில் நகை அடகு வைத்திருந்தார். திருப்பச்சென்றபோது அவரது நகையை கொடுக்காமல் எடை குறைவாக வேறு நகையை தந்துள்ளனர். இதேபோல் பிற வாடிக்கையாளர்களும் நகை திருப்புவதில் குளறுபடி ஏற்பட்டதாக கூறினர்.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரிகள் ரூ.1 கோடி மதிப்பில் நகை மோசடி நடைபெற்றதை கண்டுபிடித்தனர்.

இந்த மோசடியில் நகை மதிப்பீட்டாளர் செந்தில் மற்றும் அவரது உதவியாளர் வினோத் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் வங்கி மேலாளர் கல்யாண சுந்தரம் சஸ்பெண்டு செய்யப்பட்டார். வங்கி அதிகாரிகள் ஆவணங்களை தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். போலீசார் விசாரணையில் செந்தில் மற்றும் வினோத் ஆகியோர் வாடிக்கையாளர்களை போலியாக தயார் செய்து மோசடி செய்ததும், போலி நகைகளை அடகு வைத்தது, மேலும் அடகு வைத்த நகைகளுக்கு பதிலாக எடை குறைவான வேறு நகையை தந்ததும் தெரியவந்தது.

இதன்மூலம் சுமார் ரூ.1 கோடி வரை மோசடி நடந்தது தெரிய வந்துள்ளது.

Tags:    

Similar News