திருப்பத்தூர் அருகே பிளஸ்-1 மாணவி 3-வது முறையாக கடத்தல்
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகேயுள்ள உப்புக்காரத் தெருவைச் சேர்ந்தவர் முருகன். பிளாஸ்டிக் வியாபாரி. இவரது மனைவி இளமதி. இவர்களது மகள் நிவேதா (வயது 18). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு சத்திரக்குடியை சேர்ந்த மணிகண்டன் (40) என்பவர் முருகன் வீட்டின் அருகே குடிவந்தார். இவருக்கு திருமணமாகி குழந்தை உள்ளது. கந்துவட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார்.
மணிகண்டனிடம் மாணவியின் தாயார் கந்துவட்டிக்கு பணம் வாங்கினார். அப்போது அவர்களிடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் மாணவியை மணிகண்டன் 2 முறை கடத்திச் சென்றுவிட்டார்.
இதுகுறித்து சிங்கம் புணரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை மீட்டனர். தொடர்ந்து மாணவியை கடத்தியதால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு பரிந்து ரைக்கப்பட்டது. அதன் பேரில் மணிகண்டன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தண் டனை காலம் முடிந்ததும் அவர் ஜாமீனில் வெளி வந்தார்.
அதன்பின்னரும் மணிகண்டன் திருந்துவதாக இல்லை. மாணவி வீட்டுக்குள் புகுந்து அவரையும், அவரது தாயாரையும் காரில் கடத்திச் சென்று விட்டார். சிறிது தூரத்தில் மாணவியின் தாயாரை இறக்கிவிட்டார்.
வீடு திரும்பிய மாணவியின் தாயார் சிங்கம்புணரி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பொன்ரகு வழக்குப்பதிவு செய்து மாணவியை கடத்தி சென்ற மணிகண்டனை தீவிரமாக தேடி வருகிறார்.