சீர்காழி அருகே தனியார் பஸ்- லாரி நேருக்கு நேர் மோதல்- 22 பேர் படுகாயம்
சீர்காழி:
சிதம்பரத்தில் இருந்து இன்று காலை சீர்காழி நோக்கி தனியார் பஸ் ஒன்று வழக்கம்போல் வந்து கொண்டிருந்தது. பஸ்சில் ஏராளமான பயணிகள் இருந்தனர். பஸ்சை சிதம்பரம் மணக்குடி பகுதியை சேர்ந்த டிரைவர் ஜெகன்(26) என்பவர் ஓட்டி வந்தார்.
இன்று காலை 9 மணியளவில் தனியார் பஸ் சீர்காழி அருகே தைக்கால் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது சீர்காழியில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த லாரியும், தனியார் பஸ்சும் எதிர்பாராமல் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் பயத்தால் அலறி துடித்தனர். இந்த விபத்தில் லாரி மேலும் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த வீட்டின் மீதும் மோதி நின்றது.
பயங்கர சத்தத்துடன் பஸ்-லாரி மோதிக் கொண்டதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் ஓடிவந்து விபத்தில் காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். உடனடியாக 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தனர்.
விபத்து பற்றி தகவலறிந்து கொள்ளிடம் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டனர்.
இந்த விபத்தில் பஸ்சில் பயணித்த சிதம்பரத்தை சேர்ந்த சாதிக்பாட்சா(வயது40), அதே பகுதி கருணாகரன்(45), அட்சயவர்த்தினி, பஸ் டிரைவர் ஜெகன்(26), வல்லம்படுகையை சேர்ந்த கவிதா(35), சீர்காழி தென்பாதி ஜீவிதா மற்றும் கண்டக்டர் உள்பட 22 பேர் காயமடைந்தனர்.
இவர்களில் 18 பேரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் படுகாயமடைந்த 4 பேர் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீர்காழி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த விபத்தால் சுமார் அரைமணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.