செய்திகள்
விபத்தில் சிக்கிய லாரியும், வேனும் உருக்குலைந்து கிடக்கும் காட்சி.

பெருந்துறை அருகே லாரி-வேன் மோதி விபத்து: 2 பேர் பலி

Published On 2018-04-09 10:27 IST   |   Update On 2018-04-09 10:27:00 IST
பெருந்துறை அருகே இன்று அதிகாலை லாரி மற்றும் வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெருந்துறை:

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த சிலேட்டர் நகரை சேர்ந்த 15 பேர் ஒரு வேன் ஏற்பாடு செய்து கேரள மாநிலம் அங்கமாலி அருகே உள்ள குரூஸ்மலை கத்தோலிக் சர்ச்சுக்கு புறப்பட்டு சென்றனர்.

பின்னர் அங்கிருந்து அதே வேனில் அவர்கள் திரும்பி ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். வேனை ஈரோட்டைச் சேர்ந்த பொன்னுசாமி (வயது 30) என்பவர் ஓட்டி வந்தார். அருகே மற்றொரு டிரைவர் சிவா (30) உட்கார்ந்து வந்தார். வேனில் சிலேட்டர் புரம் மற்றும் சுள்ளியம்புதூர் பகுதியை சேர்ந்தவர்கள் சென்றனர்.

சுள்ளியம்புதூர் வந்ததும் அந்த பகுதுயை சேர்ந்த 8 பேர் இறங்கி விட்டனர். மற்ற 7 பேர் மட்டும் உட்கார்ந்திருந்தனர். இவர்கள் சிலேட்டர்புரத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

இன்று அதிகாலை 5.30மணியளவில் அந்த வேன் பெருந்துறை அடுத்த துடுப்பதி-சீனாபுரம் பிரிவு அருகே வந்தபோது எதிரே கோவையிலிருந்து துணி பண்டல் பாரம் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. லாரியை தேனி மாவட்டம் கண்டமனூரை சேர்ந்த உதயசூரியன் (55) ஓட்டி வந்தார். அருகில் உறவினர்கள் பன்னீர் செல்வம், ஜெகநாதன் இருந்தனர்.

கண்ணிமைக்கும் நேரத்தில் இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. மோதிய வேகத்தில் வேனின் முன் பகுதி லாரிக்குள் புகுந்தது.


வேனில் தொங்கியபடி இறந்த டிரைவர் பொன்னுசாமி.

இந்த கோர விபத்தில் வேன் டிரைவர் பொன்னுசாமி அருகே இருந்த கூடுதல் டிரைவர் சிவா ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

மேலும் இந்த விபத்தில் வேனில் வந்த துடுப்பதியை சேர்ந்த ராம்குமார் (19) சிலேட்டர் நகரை சேர்ந்த சகுந்தலா (48), தீபா (53), பிரிசில்லா (35), ஆதிரா (27), இவரது மகள் ஜியா (5), ரேவதி (22) மற்றும் லாரி டிரைவர் உதயசூரியன் அருகே இருந்த அவரது 2 உறவினர்கள் உள்பட 10 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இவர்கள் அனைவரும் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை- ஈரோடு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்து பற்றி பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெருந்துறை தீயணைப்பு நிலைய அலுவலர் நாகேஸ்வரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வந்து லாரிக்குள் புகுந்த வேனை வெட்டி எடுத்து மீட்டனர். #Tamilnews

Similar News