செய்திகள்
கொலைசெய்யப்பட்ட வைத்தீஸ்வரி. கைதான மணிகண்டன்

சேத்தியாத்தோப்பு அருகே இளம்பெண் கொலை- காதலன் கைது

Published On 2018-04-04 09:53 IST   |   Update On 2018-04-04 09:53:00 IST
சேத்தியாத்தோப்பு அருகே ஆசைக்கு இணங்க மறுத்ததால் இளம்பெண்ணை தீர்த்துகட்டியதாக கைதான காதலன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சேத்தியாத்தோப்பு:

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பரதூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிமாறன். இவரது மகள் வைத்தீஸ்வரி(வயது 16). இவர் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு புவனகிரியில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்தார்.

கடந்த 1-ந் தேதி காலை வழக்கம்போல் வைத்தீஸ்வரி வீட்டில் இருந்து புறப்பட்டு புவனகிரிக்கு வேலைக்கு சென்றார். ஆனால் அன்று அவர் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில், பரதூர் சாவடி பஸ் நிறுத்தத்தில் இருந்து பரதூருக்கு செல்லும் சாலையோரம் முட்புதரில் நேற்று அதிகாலை வைத்தீஸ்வரி பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து வைத்தீஸ்வரியின் பெற்றோர் ஒரத்தூர் போலீசில் புகார் செய்தனர். அதில் எனது மகள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யபட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம் என தெரிவித்திருந்தனர்.

இதையொட்டி புவனகிரிக்கு சென்று வைத்தீஸ்வரி வேலை செய்து வந்த ஜவுளிக்கடைக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் வைத்தீஸ்வரியும் பரதூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்த மணிகண்டன்(வயது 26) என்பவரும் காதலித்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து மணிகண்டனை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் பாலியல் பலாத்கார முயற்சியில் வைத்தீஸ்வரியை கொன்றதாக தெரிவித்தார்.

இதுதொடர்பாக மணிகண்டன் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

நானும், வைத்தீஸ்வரியும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்தோம். 3 முறை ஜவுளிக்கடைக்கு சென்று அவளை பார்த்து பேசியுள்ளேன். உறவினர் ஒருவரின் போன் மூலம் அவளிடம் பேசி வந்தேன். சம்பவத்தன்று பரதூர் சாவடியில் வைத்தீஸ்வரியும், நானும் பஸ் நிலையத்தில் இருந்து பேசிக்கொண்டே நடந்து வந்தோம்.

பின்னர் அவளை மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்று பேசிக் கொண்டிருந்தேன். அப்போது, ஆசைவார்த்தை கூறி வைத்தீஸ்வரியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றேன். ஆனால் அதற்கு அவள் மறுப்பு தெரிவித்தாள்.

தொடர்ந்து நான் அவளை பலாத்காரம் செய்ய முயன்று, அவளை அடித்தேன். அதில் அவள் மயங்கி விழுந்தாள்.

உடனே நான் அங்கிருந்து சென்று விட்டேன். பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு வந்து பார்த்தேன், அங்கு வைத்தீஸ்வரி பிணமாக கிடந்தாள். இதில் எனக்கு பயம் வந்தது. இதையடுத்து அவளது உடலை முட்புதருக்குள் மறைத்து விட்டு அங்கிருந்து வீட்டிற்கு சென்றுவிட்டேன். போலீஸ் விசாரணையில் நான் சிக்கி கொண்டேன்.

இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறியுள்ளார். #Tamilnews

Similar News