ஈரோட்டில் தி.மு.க. ஆர்ப்பாட்டம்- எச்.ராஜா உருவப்பொம்மை எரிப்பு
ஈரோடு, மார்ச். 7-
பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா பேஸ்புக்கில் (முகநூலில்) பெரியார் சிலை உடைக்கப்படும் என தனது கருத்தை வெளியிட்டிருந்தார்.
அவரது இந்த கருத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டு உள்ளது. ஒவ்வொரு கட்சி சார்பில் அவரை கண்டித்து போராட்டம் நடத்தப்படுகிறது.
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே எச்.ராஜாவை கண்டித்து தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சரும் மாவட்ட தி.மு.க. செயலாளருமான முத்துசாமி தலைமை தாங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.க.வினரும் மற்றும் தமிழ் புலிகள் கட்சியினரும் கலந்து கொண்டனர்.
அப்போது திடீரென எச்.ராஜா உருவ பொம்மை தீ வைத்து எரிக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் தண்ணீர் ஊற்றி அதை அணைத்தனர்.
அப்போது எச்.ராஜாவை கண்டித்து கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம்.. எச்.ராஜாவை கண்டிக்கிறோம்.., கைது செய்.. கைது செய்.. எச்.ராஜாவை கைது செய்.. சிறையில் போடு.. சிறையில் போடு... எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் சிறையில் போடு போன்ற கோஷங்களை முழங்கினர்.
முன்னதாக தி.மு.க. மாவட்ட செயலாளர் முத்துசாமி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார்.
ஆர்ப்பாட்டம் முடிந்ததும் தி.மு.க. சார்பில் எச்.ராஜாவை கைது செய்யக் கோரி ஈரோடு டவுன் போலீசில் புகார் கொடுக்கப் பட்டது. * * * ஈரோட்டில் எச்.ராஜா உருவ பொம்மை எரிக்கப்பட்ட காட்சி.