செய்திகள்

ஈரோட்டில் கொடுத்த பணத்தை கேட்டதால் பேக்கரி உரிமையாளர் குத்திக்கொலை

Published On 2018-03-06 22:11 IST   |   Update On 2018-03-06 22:11:00 IST
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே கொடுத்த பணத்தை கேட்ட காரணத்தால் பேக்கரி கடை உரிமையாளர் குத்திக்கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பவானி:

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள குமிலன்பரப்பு, அம்மன் நகரை சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 43). இவர் குமிலன்பரப்பில் பேக்கரி நடத்தி வருகிறார். இந்த கடையில் ஈரோடு, சூளை, மல்லிகைநகரை சேர்ந்த வடிவேலு (21) ஊழியராக வேலை பார்த்தார்.

கருப்புசாமியிடம் வடிவேலு ரூ.80 ஆயிரம் பணம் வாங்கி இருந்தார். பணத்தை தருமாறு கருப்புசாமி கேட்டு வந்தார். ஆனால் வடிவேலு கொடுக்கவில்லை.

சரியாக வேலைக்கு வராமலும் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று பகலில் பேக்கரிக்கு வடிவேலு வந்தார். அங்கிருந்த கருப்புசாமி ரூ.80 ஆயிரம் பணத்தை தருமாறு கேட்டார்.

அப்போது தான் வந்த மோட்டார் சைக்கிளின் சாவியை கருப்புசாமியிடம் கொடுத்த வடிவேலு, ‘‘பைக்கை வைத்துக்கொள்ளுங்கள். பணத்தை கொடுத் துவிட்டு பைக் சாவியை வாங்கிக்கொள்கிறேன்‘‘ என்று கூறினார்.

பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டார். மீண்டும் இரவு 9 மணிக்கு பேக்கரிக்கு வடிவேலு வந்தார். அங்கிருந்த கருப்புசாமியிடம் ரூ.75 ஆயிரம் பணத்தை கொடுத்தார்.

‘‘மீதி ரூ.5 ஆயிரம் பணத்தை 2 பேர் கொண்டு வருவார்கள். அவர்கள் வந்ததும் பணத்தை கொடுத்து விட்டு பைக்கை பெற்றுக் கொள்கிறேன்’’ என்று கூறி விட்டு அங்கு நின்றார்.

நள்ளிரவு வரை யாரும் அங்கு வரவில்லை. பேக்கரி மூடப்பட்டது. ஊழியர்கள் பேக்கரிக்கு வெளியே படுத்திருந்தனர். இந்த நிலையில் நள்ளிரவு 1 மணிக்கு மேல் 2 பேர் அங்கு வந்தனர்.

அவர்களும், வடிவேலும் பேக்கரிக்குள் சென்று கருப்புசாமியிடம் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியது.

வடிவேலு உள்பட 3 பேரும் சேர்ந்து கருப்புசாமியை கத்தியால் சரமாரியாக குத்தினர். இதில் 6 இடங்களில் கருப்புசாமிக்கு பலமான குத்து விழுந்தது.

இதில் கருப்புசாமி நிலை குலைந்து கீழே விழுந்தார். இதைத்தொடர்ந்து வடிவேலு உள்பட 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர்.

பேக்கரிக்குள்ளே பேசிக் கொண்டிருந்தவர்கள் திடீரென ஓடுவதை பார்த்து வெளியே படுத்திருந்த ஊழியர்கள் சந்தேகித்தனர். எனவே விரைவாக எழுந்து உள்ளே சென்று பார்த்தனர்.

அங்கு ரத்த வெள்ளத்தில் கருப்புசாமி உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு கருப்புசாமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்தாக தெரிவித்தனர். இது குறித்து சித்தோடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். கொலையாளிகளை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் வடிவேலு தனது மனைவி மற்றும் 1½ வயது குழந்தையுடன் வெளியூருக்கு தப்பி செல்லும் நோக்கத்தில் ஈரோடு பஸ் நிலையத்தில் நிற்பது போலீசாருக்கு தெரியவந்தது.

எனவே போலீசார் அங்கு விரைந்து சென்று வடிவேலுவை சுற்றி வளைத்து பிடித்தனர். அந்த நேரத்தில் கொலையில் ஈடுபட்ட வடிவேலுவின் கூட்டாளிகள் 2 பேரும் அங்கு வந்ததாகவும், அவர்களையும் போலீசார் பிடித்ததாகவும் தெரிகிறது.

இந்த கொலை சம்பவம் பவானி, சித்தோடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News