செய்திகள்

திருவள்ளூரில் கைதான மாவோயிஸ்டுகள் 3 பேரிடம் கேரளா - ஆந்திரா போலீஸ் விசாரணை

Published On 2018-02-26 08:23 GMT   |   Update On 2018-02-26 08:23 GMT
திருவள்ளூர் மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டுகள் 3 பேரிடம் கேரளா மற்றும் ஆந்திரா மாநிலம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த புல்லரம்பாக்கம் கிராமத்தில் கடந்த 10-ந் தேதி மாவோயிஸ்டுகள் தசரதன், செண்பகவள்ளி, வெற்றி வீரபாண்டியன் ஆகிய 3 பேரை, புல்லரம்பாக்கம் போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

அவர்கள் 3 பேரிடமும் கூடுதல் விசாரணை மேற்கொள்ள வேண்டி திருவள்ளூர் நீதிமன்றத்தில் போலீசார் மனு அளித்தனர். இதையடுத்து அவர்களை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி இளங்கோவன் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து 3 மாவோயிஸ்டுகளையும் போலீசார் மதுரை மற்றும் புதுக்கோட்டைக்கு அழைத்துச் சென்று அவர்கள் தங்கியிருந்த வீடுகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் தசரதன், செண்பகவள்ளி இருவரும் அப்பகுதியில் பெயிண்டர் மற்றும் செவிலியர் வேடங்களில் தங்கியிருந்து சதித்திட்டங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும் ஆய்வின்போது அவர்களிடம் இருந்து மடிக்கணினிகள், சிடி, பென்டிரைவ் மற்றும் துண்டு பிரசுரங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

நேற்று மாலை மாவோயிஸ்டுகள் 3 பேரும் திருவள்ளூர் அழைத்து வரப்பட்டனர். அவர்களிடம் ஆந்திர மாநிலம், கேரளா மாநிலம், விழுப்புரம் மாவட்ட கியூ பிரிவு போலீசார் திருவள்ளூர் தாலுக்கா காவல் நிலையத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

அவர்களிடம் இன்னும் விசாரணை முழுமையாக முடியவில்லை என்று தெரிகிறது. மேலும் மற்ற மாநில போலீசாரும் தொடர்ந்து விசாரணை நடத்த முடிவு செய்து இருக்கிறார்கள்.

இதற்கிடையே மாவோயிஸ்டுகள் 3 பேரின் 5 நாள் போலீஸ் காவல் இன்றுடன் முடிகிறது. எனவே இன்று பிற்பகல் அவர்கள் 3 பேரும் திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படுகிறார்கள்.

மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
Tags:    

Similar News