செய்திகள்

பா.ஜனதாவுக்கு தே.மு.தி.க. ஆதரவா? - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

Published On 2018-02-13 14:59 IST   |   Update On 2018-02-13 14:59:00 IST
‘நீட்’ தேர்வு வந்தால் சாமானிய மக்களும் மருத்துவம் படிக்க முடியும். தேர்தல் கூட்டணி குறித்து தலைவர் விஜயகாந்த் தான் முடிவு எடுப்பார் என்று தே.மு.தி.க. மகளிர் அணி செயலாளர் பிரேமலதா கூறினார்.
ஆலந்தூர்:

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மனைவியும், மகளிர் அணி செயலாளருமான பிரேமலதா சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா படத்தை சட்டசபையில் திறப்பது குறித்து ஒவ்வொருவரும் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். சட்டசபையில் ஜெயலலிதா படம் ஏன் திறக்க கூடாது என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த தெளிவாக கூறியிருக்கிறார்.

ஜெயலலிதா ‘குற்றவாளி’ என்று கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. அவரது படத்தை அ.தி.மு.க. தலைமை கழகத்திலோ, போயஸ் கார்டன் வீட்டிலோ, அல்லது ஜெயலலிதாவால் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஆனவர்கள் வீடுகளில் திறக்கட்டும். சட்டமன்றத்தில் திறந்ததை ஏற்றுக் கொள்ள முடியாது. சட்டமன்றம் மிகச்சிறந்த எடுத்துக்காட்டானவர்கள், முக்கியமானவர்கள் வாழ்ந்த இடம். ஜெயலலிதா குற்றவாளி இல்லை யென்றால் படத்தை திறப்பதற்கு எதிர்ப்பு இல்லை.

தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோதமான அரசு பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். ஆனாலும் அவர்கள் செய்வதை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். எதிர்காலத்தில் ஆட்சியாளர்கள் எப்படி செயல்பட போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். நீட் தேர்வுக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆதரவு அளித்துள்ளார். எங்களுக்கு பிடித்த கருத்துக்களை சொன்னால் பா.ஜனதாவுக்கு ஆதரவா என கேட்கிறார்கள். பல கோடி பணம் தந்து மருத்துவ படிப்புக்கு சேர வேண்டியுள்ளது. ‘நீட்’ தேர்வு வந்தால் சாமானிய மக்களும் மருத்துவம் படிக்க முடியும். தேர்தல் கூட்டணி குறித்து தலைவர் விஜயகாந்த் தான் முடிவு எடுப்பார். முதலில் தேர்தல் வரட்டும் பின்னர் பார்க்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews

Similar News