ஓடும் ரெயிலில் விமானப்படை ஊழியர் மனைவியிடம் சில்மிஷம்: சி.பி.சி.ஐ.டி. சப்-இன்ஸ்பெக்டர் கைது
ஈரோடு:
கோவை விமானப்படை பிரிவில் ஊழியராக இருப்பவர் அசோக்குமார். இவரும் இவரது மனைவியும் சென்னைக்கு சென்றனர்.
பிறகு சென்னையில் இருந்து கோவைக்கு செல்லும் புளு மவுண்டன் ரெயிலில் மீண்டும் கோவைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
அவர்கள் வந்த ஏ.சி. பெட்டியில் கூடலூரை சேர்ந்த சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரும் வந்து கொண்டிருந்தார்.
ரெயில் சேலம் அருகே வந்து கொண்டிருந்தபோது சந்திரசேகர் விமானப்படை ஊழியர் மனைவியிடம் திடீரென செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டாராம். இதை விமானப்படை ஊழியரும், அவரது மனைவியும் கண்டித்தனர்.
அந்த ரெயில் இன்று அதிகாலை 2.45 மணிக்கு ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வந்தது. ரெயிலில் இருந்து அசோக்குமாரும், அவரது மனைவியும் இறங்கினர். ஈரோடு ரெயில்வே போலீஸ் நிலையத்துக்கு சென்ற அவர்கள் சில்மிஷத்தில் ஈடுபட்ட சந்திரசேகர் மீது புகார் செய்தனர்.
இதற்கிடையே அந்த ரெயிலில் பயணம் செய்த சந்திரசேகர் கோவைக்கு சென்றது போலீசாருக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ஈரோடு ரெயில்வே போலீசார் கோவைக்கு விரைந்தனர்.
அங்கு சந்திரசேகரை மடக்கி பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. #tamilnews