கோடியக்கரை கடலில் வேதாரண்யம் மீனவர்கள் விரட்டியடிப்பு - இலங்கை கடற்படையினர் நடவடிக்கை
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவருக்கு சொந்தமான படகில் அப்பகுதியை சேர்ந்த வடுகநாதன், சுப்பிரமணியன், மணிகண்டன், அழகேசன் ஆகியோர் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
இந்த நிலையில் வேதாரண்யம் கோடியக்கரை கடலில் தென்கிழக்கு பகுதியில் அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு படகில் அங்கு வந்த இலங்கை மீனவர்கள் வேதாரண்யம் மீனவர்களை மிரட்டி இவர்கள் பிடித்து வைத்திருந்த சுமார் 30 ஆயிரம் மதிப்புள்ள மீன்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் கத்தியால் வேதாரண்யத்தை சேர்ந்த மீனவர்களையும் தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் மீனவர்களை அங்கிருந்து விரட்டி விட்டனர்.
இதைத் தொடர்ந்து வேதாரண்யம் வந்த வடுகநாதன், சுப்பிரமணியன், மணிகண்டன், அழகேசன் ஆகியோர் வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
கடலுக்கு மீன்பிடிக்க சென்ற வேதாரண்யம் மீனவர்களை இலங்கை மீனவர்கள் விரட்டியடித்து தாக்குதல் நடத்தியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews